நாம் தமிழர் ஆட்சியில் நாங்க சிற்பி போல தமிழ்நாட்டை செதுக்குவோம்... சீமான்
ராணிப்பேட்டை: நாம் தமிழர் ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இந்த தமிழ்நாட்டை ஒரு சிற்பி போல செதுக்குவோம் என்றார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Recommended Video
ராணிப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சீமான் பிரசாரம் செய்த போது பேசியதாவது:
நாங்கள் தமிழர் என்று சப்தமாக பேசினால் கொந்தளிக்கிறானுக திராவிடனுக... என் மொழி தமிழ் என் இனம் தமிழ் என் நாடு தமிழ்நாடு என் தலைவன் பிரபாகரன் எமது இலக்கு பூமிப்பந்தில் எமக்கு என ஒரு விடுதலை பெற்ற தாய்நிலம். அது எந்த நிலம் என்பதை காலம் தீர்மானிக்கும்
மொழியை இழந்துவிட்ட இனங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. இன அடையாளம் தெரியாமல் அழிந்துவிட்டன. யேசு பேசியமொழி இன்று இல்லை.. உலகின் பல மொழிகள் இல்லை. இந்திய பெருநிலத்துக்குள் இருக்கும் ஒரே ஒரு தூய இனம் தமிழர் மட்டும்தான். எல்லா இனங்களுமே கலப்பினங்கள். இந்த நிலப்பரப்பு முழுவதும் நாகர்கள்-தமிழர்கள் வாழ்ந்தார்கள்.. இந்திய நிலப்பரப்பை உரிமை கொண்டாட ஒரு இனம் இருக்கிறது என்றால் தமிழினம்தான் உரிமை கொண்டாட முடியும்.

நாம் தமிழர் ஆட்சி
தமிழ் மட்டுமே பல லட்சக்கணக்கான சொற்களை கொண்ட உலகின் ஒரே மொழி. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் எக்ஸ்டென்சன், காலனி என எதுவும் இருக்காது.. அனைத்தும் தமிழில்தான் இருக்கும். சிற்பி போல இந்த நாட்டை நாங்கள் செதுக்குவோம். அப்படி ஒரு தலைவன் நமக்கு கிடைத்தான். ஆனால் அப்படி ஒரு தலைவனை பயங்கரவாதி, பிரிவினைவாதி என ஊர் உலகம் சொன்னதை அந்த இனத்தின் மக்களே நம்பினார்கள். லெனினின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தேசிய இனத்துக்கான தன் உரிமைக்கு போராடிய தலைவன் பிரபாகரனை லெனின், ஸ்டாலினை ஏற்றுக் கொண்டவர்களே நிராகரித்தனர்.

ஆரியரால்தான் ஜாதி வந்தது
தாய்மொழி தெரியாமலேயே 2, 3 தலைமுறைகள் உருவாகிவிட்டன. மதமும் ஜாதியும் யாருக்கும் அடையாளம் கிடையாது. ஜாதி என்பது இடையில் வந்தது. மதங்கள் வந்து 2,000 ஆண்டுகளாகின்றன. ஆரியர் வந்தபின்னர் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஜாதிகள் உருவாகின. ஜாதி மத உணர்ச்சிகள் நம்மை பிளக்கும்.

இனங்களுக்கு எதிரானது அல்ல
நமக்கு பதவி என்பது மக்களுக்கான உதவி. நாம் பணத்துக்காக அரசியல் செய்ய வரவில்லை. நாம் பிறந்த இனத்துக்காக சேவை செய்ய வந்தவர்கள். நாம் தமிழர் கட்சி என்பது பிற இனத்துக்கு எதிரானது அல்ல. எங்கள் இனப்பகையை வெல்வதற்காக உருவானதுதான் நாம் தமிழர் கட்சி. எங்கள் கனவு மிகப் பெரியது.

இனவிடுதலை
எங்கள் இனத்தின் விடுதலை என்பதே எங்கள் பெருங்கனவு. அந்த பெருங்கனவை சுமந்து நின்றது எங்கள் தலைவர் பிரபாகரன். முருகன் வேலேந்தி பாய்ந்தான்; அருண்மொழிச் சோழன், அரசேந்திர சோழன் வாளேந்தி பாய்ந்தனர்; பிரபாகரன் துப்பாக்கி ஏந்தி பாய்ந்தார்; நாங்கள் அரசியல் ஏந்தி பாய்கிறோம். எங்கள் மூதாதைகளின் கனவை நாங்கள் சுமக்கிறோம். இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications