இலைக்கு வாக்கு கேட்டோம்.. ஆனால் குக்கரில் குத்தக் கூடாதுனு சொல்லலியே.. பம்மும் செல்லூர் ராஜூ
இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோம், ஆனால் குக்கருக்கு வாக்களிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோமே தவிர குக்கருக்கு வாக்களிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லையே என்று பம்முகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் அதிமுக இணைப்புக்காக தினகரன், சசிகலாவை ஒதுக்கினர்.
இதனால் தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் 7 சுற்றுகளிலும் தினகரனே முன்னிலையில் உள்ளார்.
பிளவுப்படுத்த முடியாது
இதுகுறித்து செல்லூர் ராஜூ கூறுகையில், தினகரனின் வெற்றி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிமுக ஒரு ஆலமரம். அதை யாராலும் பிளவுப்படுத்த முடியாது. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றுதான் கேட்டோமே தவிர, குக்கருக்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறவில்லையே.
மக்கள் கேள்வி
ஏன் இரண்டு அணிகளும் சண்டையிட்டு கொள்கின்றனர் என்று மக்கள் நினைக்கிறார்கள். நாங்கள் தோளில் சுமந்தவர்தானே தினகரன். திமுகவுக்கு எதிரான ஓட்டு என்றார் செல்லூர் ராஜூ.
மறுப்பு தெரிவித்தார்
அதிமுக ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் சசிகலாதான் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அப்போது அவரை ஸ்லீப்பர் செல் என்று தெரிவித்தனர். அதற்கு செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லூர் ராஜூ ஆதரவு தொனி
தோளில் தூக்கி கொண்டாடிய தினகரன்தானே ஜெயித்து விட்டு போகட்டும் என்பது போல் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். இதை பார்க்கும் போது நாளை இவர்கள் ஒன்று சேர பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றே தெரிகிறது.