செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதையில் 2017ல் ரயில் இயக்கம்: தென்னக ரயில்வே
நெல்லை: செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதைத் திட்டம் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற்று, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் வஷிஷ்டா ஜோதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான இரு மாநிலங்களையும் இணைக்கும் செங்கோட்டை - புனலூர் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 6 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.இதில் சுமார் 80% பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த தடத்தில் புதியதாக ஆறாவது குகை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

மேலும் கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில் இதற்கான ஒப்பந்த புள்ளியும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக தனியார் நிறுவனம் பணிகளை தொடங்கியது. செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதைக்காக புதிய குகை அமைக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது.

இதனிடையே இன்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் வஷிஷ்டா ஜோதி செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதையில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் செங்கோட்டை ரயில் நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகளையும், முன் பதிவு மையத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், செங்கோட்டை-புனலூர் அகலப் பாதை பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். 2017-ம் ஆண்டு துவக்கத்தில் இந்த தடத்தில் ரயிலை இயக்க முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கான ஆய்வு ஏ,பி,சி,என்ற அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. நுங்கம் பாக்கம் ரயில்நிலைய கொலை குறித்து கேட்டபோது, இந்த ஆண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்காக ரூ. 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications