செங்கொடி- மூன்று சேய்களைக் காத்த அன்னை- கவிஞர் வாலியின் தீர்க்கதரிசனம்!

Subscribe to Oneindia Tamil

பெற்ற மகனின் உயிர்காக்க ஒரு தாய் போராடுவதில் எந்த ஆச்சர்யமில்லைதான். ஆனால் யாரென்றே தெரியாத ஒரு இருபது வயதுப் பெண், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தன் உயிரை தீக்கு திண்ணக் கொடுத்த அதிசயம் இந்தத் தமிழ் மண்ணில் நிகழ்ந்தது.

Senkodi, the saviour of 3 Tamils from death

அவள்தான் காஞ்சிபுரம் செங்கொடி. இருபத்து ஏழு வயது நிரம்பிய தமிழ் உணர்வாளர். கூடப் பிறந்தால்தான் தொப்புள் கொடி உறவா... இல்லையில்லை... தமிழர் என்ற அடையாளத்துக்குள் வரும் அத்தனை பேரையும் தன் தொப்புள் கொடி உறவாக மதித்த இளம் பெண்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உயிரைக் காக்க தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டாள் (ஆகஸ்ட் 28, 2011)

அந்த கன்னித் தாயின் உயிர்த் தியாகம் வீண் போகவில்லை. இதோ மூன்று உயிர்கள் காக்கப்பட்டுவிட்டன.

செங்கொடியின் உயிர்த்தியாகத்துக்காக, கவிஞர் வாலி முன்பு எழுதிய ஒரு கவிதை இது. அதில் செங்கொடியை, 'செங்கொடி கன்னியாயினும் - மூன்று சேய்களைக் காத்த அன்னை' என்று குறிப்பிட்டிருப்பார் கவிஞர்.

கவிஞர் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்....

இதோ அந்த உயிரை உருக்கும் கவிதை...

செங்கொடி- மூன்று சேய்களைக் காத்த அன்னை- கவிஞர் வாலியின் தீர்க்கதரிசனம்!


செங்கொடி

கொடிகாக்கத் - தன்னைக்

கொளுத்திக் கொண்ட உயிருண்டு

உயிர்காக்கத் தன்னைக் -

கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு:

அதன்பேர் செங்கொடி:

இனிமேல் -

அதுதான் என் கொடி!

தொன்மைத் தமிழரெலாம் - ஒரு

தொப்புள் எழுந்த கொடி: இவள்

தொப்புள் எழுந்த கொடிகளைக் காக்க -

வெப்புள் விழுந்த கொடி!

இதுதான் -

எனது -

வணக்கத்திற்குரிய கொடி! இதை

வணங்காது வேறெதற்கு முடி?

மூவுயிர் விடு! ஈடாக என் -

பூ வுயிர் எடு!

என்று

எமனிடம் தந்தாள் தன்னை;

செங்கொடி கன்னியாயினும் - மூன்று

சேய்களைக் காத்த அன்னை!

ஆம்;
அந்தக் -

கன்னி தீயானாள்; தீயாகி -

கன்னித் தாயானாள்!

பெருவாரியான நாடுகள்

பெரும்பிழை புரிந்தோரையும் -

சிறையில் வைக்க முயலுமேயன்றி -

சிதையில் வைக்க முயாலாது;

ஏன்

எனில் -

சிதையில் வைத்தது தவறென்றால்

சீவனை வழங்க இயலாது!

மரண தண்டனைக்குதான்

மரண தண்டனை தர வேண்டும்;

மானுடற்கு

மரணம் -

கயிறு வழி யல்ல;

காலன் வழிதான் வர வேண்டும்!

விழிநிறையக் கனாக்களுமாய்;

விடை தெரியா வினாக்களுமாய்;

இருபது ஆண்டுகள்

இறந்து போனபின்...

இம் மூவர்க்கு

இன்னமும் மீதமாய் -

இருக்கும் வாழ்வையும் - கயிறு

சுருக்கும் என்றால் ....

அது - அரக்கம்

இருக்க வேண்டாமா -

இரக்கம்?

'கண்ணுக்குக் கண்! எனும்

கருத்தை ஏற்காதவர்

காந்தி;

தபால்

தலையில் மட்டுமல்ல

நம்

நடக்க வேண்டாமா -
நம்

எண்ணத்திலும் தேசப்பிதாவை

ஏந்தி?

செங்கொடியே என் செல்ல மகளே!

சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!

ஒன்றுரைப்பேன்; உன் தியாகத்திற்கில்லை

ஒப்பு;

என்றாலும் - அதை

ஏற்பதற்கில்லை; அது தப்பு!

- கவிஞர் வாலி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+