தமிழகத்தின் கெஜ்ரிவால் விரைவில் சிறைக்கு செல்வார்.. பொங்கித் தீர்த்த எச்.ராஜா!
திண்டுக்கல்: "அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி. அவருடன் 'தமிழகத்தின் கெஜ்ரிவால்' ஸ்டாலினும் செல்வார் என தகவல்கள் வருகின்றன." என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வருகை தந்தார். மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பழனிக்கு வந்திருந்த நயினார் நாகேந்திரனுக்கு மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நயினார் நாகேந்திரனுடன் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

எச்.ராஜா பேட்டி
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எச். ராஜா, "நாடு முழுவதும் நீட் தேர்வு முறையை கொண்டு வந்தது திமுக. நீட் தேர்வை முன் மொழிந்தது திமுக எம்.பியாக இருந்த காந்தி செல்வன். திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் போது 2013 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாகவே நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. நீட் தேர்வில் தீர்வு வேண்டுமென்றால் தமிழக முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார்.
தமிழகத்தின் கெஜ்ரிவால் சிறைக்கு செல்வார்
பொய், புரட்டு, தகிடுதத்தம் என எப்போதும் இருக்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். பத்து ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறை செல்வது உறுதி. அவருடன் 'தமிழகத்தின் கெஜ்ரிவால்' ஸ்டாலினும் செல்வார் என தகவல்கள் வருகின்றன. திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.
தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூட்டைகள் பிடிபடுகிறது. இந்த மோசமான ஆட்சி அடுத்த தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் வளைத்து வளைத்து கஞ்சாவை பிடிக்கும் தமிழக காவல்துறை சிந்தடிக் போதைப் பொருட்களை ஒரு கிராம் ஆவது பிடித்துள்ளதா? என்று தமிழக ஆளுநர் கேட்ட கேள்விக்கு இதுவரை தமிழக முதலமைச்சர் பதில் சொல்லாதது ஏன்?
ஸ்டாலின் தடுமாறுகிறார்
2026 சட்டசபை தேர்தலுக்காக பாஜக தலைவர்கள் மிக வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளனர். கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணி வெல்லும் என தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க - பாஜக கூட்டணி, 53 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இதனால், திருத்தணியில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் தடுமாறினார்.
டாஸ்மாக் ஊழல் நடக்கவில்லை என்றால், 20 நாட்களில் வழக்கை முடியுங்கள் எனச் சொல்லி, அதற்கு திமுக ஒத்துழைப்பு அளித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, இழுத்தடிப்பது என்பது அவர்கள் செய்த ஊழல் வெளிவந்துவிடும் என்ற பயம் தான் காரணம்" என விமர்சித்துள்ளார் எச்.ராஜா.
பொய் புரட்டு
இதேபோல கோவையில் நடந்த கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, "திமுகவினர் தேச துரோகிகள். இந்திய ஒற்றுமையை கெடுக்க வேண்டும் என சுதந்திரத்தின் போதிருந்தே முயற்சி செய்து வருபவர்கள். ஒவ்வொரு விஷயத்திலும், தமிழக முதல்வர் பொய் மட்டுமே பேசி வருகிறார். பொய் புரட்டு திராவிட உருட்டு. தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், வரும் தேர்தலில் இந்துக்கள் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்த வேண்டும்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications