For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேமிப்புக்கான தண்டனையாக எல்ஐசி காப்பீடுக்கு சேவை வரி விதிப்பதா?: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்கின்ற பாலிசிதாரர்களிடம் 14.5 சதவிகிதம் சேவை வரி வசூலிப்பது, சேமிப்புக்காக விதிக்கப்படும் தண்டனையே என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சேவை வரியை ரத்து செய்து, முன்பு இருந்த 80 சி பிரிவின் கீழான வரிவிலக்கு மீண்டும் தரப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

Service tax on insurance must be relooked: Vaiko

இந்திய அரசு பொதுத்துறைக்குப் பெருமை சேர்ப்பது ஆயுள் காப்பீட்டுக் கழகம். இன்று எல்.ஐ.சி. வழங்கியுள்ள தனி நபர் பாலிசிகள் மற்றும் குழு காப்பீட்டுப் பாலிசிகளின் எண்ணிக்கை 40 கோடிகள் ஆகும். உலகில் இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள நிறுவனம் வேறு எதுவும் இல்லை.

அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளில் வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்கள் மீது சேவை வரி இல்லை. ஆனால் இந்தியாவில், முதன் முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 ஜனவரி முதல் எல்.ஐ.சி. பிரிமியத்திற்கு 12 சதவிகித சேவை வரி விதிக்கப்பட்டது. அடுத்து வந்த பா.ஜ.க. ஆட்சியில் 2015 ஜூன் முதல் 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இப்போது ஸ்வர்ச் பாரத் செஸ் 14.5 சதவிகிதம் வசூலிக்கிறது.

கடந்த 60 ஆண்டுகளாக வேகமாக முன்னோக்கிச் சுழன்றுள்ள எல்.ஐ.சி. என்னும் சக்கரத்தை பின்னோக்கித் திருப்புகின்ற முயற்சியே சேவை வரி ஆகும். தங்கள் வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்கின்ற பாலிசிதாரர்களிடம் 14.5 சதவிகிதம் சேவை வரி வசூலிப்பது, சேமிப்புக்காக விதிக்கப்படும் தண்டனையே ஆகும்.

ஆயுள் காப்பீட்டுச் சேவை வரி மூலம் அரசாங்கத்திற்குக் கிடைப்பது ரூபாய் 6,504 கோடி. ஆனால், 2014-15 இல் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் மூலம் ரூபாய் 62,398 கோடிகளை அரசாங்கம் இழந்திருக்கின்றது. இதனால் கடந்த ஓராண்டில் 29 பேர் பில்லியனர்கள் பட்டியலில் புதிதாக இடம்பிடித்து இருக்கின்றார்கள். உலகச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தாலும், இங்கே கலால் வரி போட்டு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஆனால், உலகச் சந்தையில் பெட்ரோல் விலை கூடினால் இறக்குமதி சமன்பாடு எனச் சொல்லிக்கொண்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல் தருகிறார்கள். அந்தச் சலுகை சாதாரண பொதுமக்களுக்குக் கிடையாது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த வகையில் ரூபாய் 17 ஆயிரம் கோடிகளை சாதாரண மக்களிடமிருந்து அரசு பறித்திருக்கிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழம் 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூபாய் 7 இலட்சத்து 4 ஆயிரம் கோடிகளைத் தந்தது. 12ஆவது திட்ட காலத்தில் முதல் மூன்று ஆண்டுகளிலேயே ரூபாய் 7 லட்சத்து 52 ஆயிரம் கோடிகளைத் தந்துள்ளது. ரயில்வே மேம்பாட்டுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியைத் தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இத்தகைய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். காப்பீட்டுத் திட்டங்கள் மீதான சேவை வரியை ரத்து செய்து, முன்பு இருந்த 80சி பிரிவின் படி வரிவிலக்கு மீண்டும் தரப்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

English summary
Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko has said that the union government should come forward to immediately remove service tax on health insurance schemes. In a statement here, he said that the decision to impose tax on insurance schemes is an attempt to reverse the growth cycle of LIC, which is marching ahead for the past six decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X