ஆன் தி ஸ்பாட் அம்பலப்படுத்துங்கள்.. மீடூ வரும் வரை காத்திருக்காதீர்கள்!
பாலியல் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் பகிரங்கப்படுத்த வேண்டும்
Recommended Video
சென்னை: மீடூ ஹேஷ்டேக் வந்த பிறகுதான் அடுத்தடுத்து பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்களைக் குவித்து வருகின்றனர் பிரபலங்கள். இதுவரை அவர்கள் காத்திருந்தது ஏன் தெரியவில்லை. அதைக் கேட்டால், அதான் இப்ப சொல்லிட்டோமே என்று கூறி விடுகிறார்கள். இப்படி கால தாமதமாக சொல்லப்படும் புகாரால் எந்த நன்மை விளைந்து விடும் என்பதுதான் புரியவில்லை.
ஒரு பெண் தன்னை முன்னிறுத்தவும், அடுத்தவர் பெயரை கெடுக்கவும், முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் பாலியல் குற்றச்சாட்டுதான்!! இது இப்போது இல்லை... பாலிவுட்டில் நானா படேகர், குயின் பட இயக்குநர் சேகர் கபூர் காலத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. சிலர் அதை பெரிதாக பார்த்தார்கள், பலர் அதை கண்டுக்கவே இல்லை. நாளடைவில் இதுபோன்ற புகார்கள் எழவே இல்லை. அதற்கு காரணம், ஒன்று அப்படிப்பட்ட பாலியல் தொல்லைகள் நடந்திருக்காது அல்லது நடந்த பாலியல் தவறுகளை யாரும் முன்வந்து சொல்லாமல் விட்டிருக்கலாம்.
[ ஒரு தாய் செய்யற வேலையா இது!... இப்படி செய்ய எப்படித்தான் மனம் வருதோ! ]
வரிசை கட்டி வருகின்றனர்
ஆனால் அப்போதெல்லாம் இதை பெரிதுபடுத்தாத சமூகம், இப்போது சின்மயி சொல்லும்போது மட்டும் ஏன் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டாக எடுத்து கொள்ளப்படுகிறது என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. கொஞ்ச நாள் முன்புகூட ஸ்ரீரெட்டி, தன்னை பாலியல் ரீதியாக பாழாக்கி விட்டார்கள் என்று ஒரு லிஸ்ட்டு போட்டு ஊர் ஊராக சென்றபோது கூட அது பெரிதுபடுத்தி பார்க்கப்படவில்லை. சின்மயி போன்றே அதிதி ராவ், தனுஷ் ஸ்ரீ தத்தா, கங்கனா ரனாவத் என்று அனைவருமே மீ டூ வில் சொல்ல ஆரம்பித்து வருகின்றனர்.
என்ன காரணம்?
இதில் ஒரு விஷயத்தை உற்றுநோக்கினால், பாலியல் குற்றம் சுமத்தப்படும் எல்லோருமே பிரபலங்கள்தான்! மலையாளம், இந்தி, தெலுங்கு என மொழி வேறுபாடுகள் இல்லாமல், சமத்துவமாக பாலியல் குற்றச்சாட்டுகள் படர்ந்து வருகிறது. குற்றம் சாட்டப்படும் எல்லாருமே அரசியல், சினிமா, புள்ளிகள்தான்! மக்களின் நன்மதிப்பை பல காலம் பெற்றவர்கள்தான்!! இவர்கள் மீது சேற்றை வாரி பூச சொல்ல காரணம் என்னவாக இருக்க முடியும்?
ஏன் தைரியம் இல்லை
இந்த மீ டூ அறிமுகமான பிறகுதான் வரிசை கட்டிக் கொண்டு புகார்களை எடுத்து கொண்டு வருகிறார்கள். ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தீர்கள்? என்று கேட்டால், அதை வெளியில் சொல்லக்கூடிய அளவுக்கு தைரியம், சூழல் இல்லை என்கிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும்? தனது மானத்திற்கு அவமானம் என்று தெரிய வந்தால் ஒரு பெண் அமைதியாக இருப்பதே தவறுதானே. சாமானியப் பெண்களே தைரியமாக வெளியில் அம்பலப்படுத்தும்போது விஐபி பெண்களுக்கு ஏன் இந்த தைரியம் இல்லாமல் போனது என்ற கேள்வி எழுகிறது.
சுயநலம்தானே?
எப்போதோ நடந்து முடிந்த இந்த விஷயத்தை இப்போது சொல்வதால் என்ன பலன் இருக்கும் என்று தெரியவில்லை. காரணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கப் போவதில்லை. அதேபோல புகாருக்குள்ளானவர்களும் தண்டனையிலிருந்து தப்பி விடும் நிலைதான் அதிகம். அதிகபட்சம் அவர்களது பெயர் கெடும், அவ்வளவே. அதை விட முக்கியம், சந்தித்த அசிங்கம், அவமானங்களை எல்லாம், பணம், புகழ் எல்லாவற்றையும் சந்தித்து ஓய்ந்து விட்டு மார்க்கெட் போன பிறகு வந்து சொல்வது என்பதும் கூட ஒரு வகையில் சுயநலமான செயல்தானே, தவறுதானே!
ஒப்பந்தமானவர் நிலை?
பெரும்பாலானோர் சொல்லும் குற்றச்சாட்டுகள், பட வாய்ப்புகள் கேட்க போனதால் இப்படி நடந்தாக சொல்கிறார்கள்! படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் வாய்ப்பு என்று சொன்னதால், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் பட வாய்ப்பு நழுவி போனதாக கூறுகிறார்கள். அப்படியென்றால், இவர்களுக்கு பட வாய்ப்பு நழுவி சென்றால், அந்த படத்தில் வேறு ஒரு கதாநாயகி ஒப்பந்தமாகி நடித்திருப்பாரே... அவரது நிலை என்ன? அவர் அந்த பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டவரா? என்ற இயல்பான கேள்வி வந்து போகிறது.
சரியான செயல் இல்லை
பாலியல் அவலங்கள் இல்லவே இல்லை என்று கூற முடியாது. அது சினிமா என்றில்லை... எல்லா துறைகளிலும் நுழைந்து பெண்களின் அன்றாட வாழ்வியலை புரட்டி போட்டு கொண்டுதான் இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதிலேதான் பெண்கள் கவனம் செலுத்தவேண்டுமே தவிர இப்படி, பெயர்களை சொல்லி அவமானப்படுத்தி வருவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காலையில் பாதிப்பு ஏற்பட்டால் அதை காலையிலேயே சொல்ல வேண்டும். அந்தத் தைரியம் பெண்களுக்கு வர வேண்டும். அதை விட்டு பல வருடம் கழித்து வந்து புகார் கூறுவது என்பது சரியான செயலாகவே தெரியவில்லை.
துணிந்து சொல்ல வேண்டும்
பாலியல் தொல்லைகளைச் சொல்ல மீ டூ வந்துதான் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது கிட்டத்தட்ட ஒரு சுய தம்பட்டாமாகவே அமையும். மாறாக, தவறு நடந்தால் நடந்த தவறு மனதிலிருந்து மறைவதற்குள் அதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினால்தான் தவறு செய்தவர்கள், அது யாராக இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப்பட வாய்ப்பு கிடைக்கும். அப்படிச் செய்யாமல் விட்டு விட்டால், அந்த தவறான நபர் அடுத்தடுத்து செய்யும் தவறுகளுக்கு நாமும் உடந்தையாகிப் போனோம் என்ற குற்றச்சாட்டைத்தான் சுமக்க நேரிடும்.