சன்னி-ஷியாக்கள் இணைந்து இஃப்தார்: ஒற்றுமையை பறைசாற்றிய சென்னை முஸ்லிம்கள்
சென்னை: உலகமெங்கும் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் நடுவே மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இருபிரிவினரும் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி சென்னையில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
ஷியா சன்னி ஒற்றுமை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இஃப்தார் விருந்து நடைபெற்றது. இரு பிரிவு இஸ்லாமியர்களும் அதில் மகிழ்வோடு பங்கேற்றனர்.
இவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி கான் கூறுகையில், "ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களுக்கு உலகமெங்கும் பல பகுதிகளில் மோதல்கள் இருக்கலாம். ஆனால், ரம்ஜான் இஃப்தார் மூலமாக, சென்னை முஸ்லிம்கள், ஒற்றுமையை உலகத்திற்கு பறைசாற்றியுள்ளோம்" என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடுதல் டிஜிபி ஷகில் அக்தர் "நான் கடவுளை நம்புபவன். பிரிவினைகளை அல்ல. சமூகம் பல பிரிவுகளாக பிரியும்போதுதான், மத சண்டை, தீவிரவாதம் என பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதைத்தான் நாம் இப்போது உலகில் பார்க்கிறோம்" என்றார்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் ஹசன் குமாலி கூறுகையில், "குவைத் மசூதியில் ஷியாக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. அமைதி, ஒற்றுமை, பிறருடன் இணக்கமாக இருப்பது இஸ்லாத்துக்கு அவசியம்" என்றார். பாதுகாப்பு ஆய்வாளர் நிரஞ்சன் கூறுகையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என யாராக இருந்தாலும், அந்த மதங்களின் மையக் கருத்தை எடுத்துக்கொண்டு வாழ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications