காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு: நவ. 12 ல் தமிழகத்தில் முழு அடைப்பு
சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 12 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த மதிமுக உள்ளிட்ட 21 அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இலங்கை தலைநகர் கொழும்புவில், இம்மாதம், 15ம் தேதியிலிருந்து, 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்த இலங்கையில், காமன்வெல்த் நாடுகளின் மாநாடுகள் நடத்தக் கூடாது. அப்படியே நடந்தாலும், அதில், இந்தியா பங்கேற்க கூடாது என, தமிழகத்தில் உள்ள, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, தமிழக சட்டசபையில், ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால், உயிருடன் பிடிக்கப்படுவது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்படுவது தொடர்பான, வீடியோ காட்சிகளை, பிரிட்டனின், சேனல் -4 டிவி நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டது. இதனால், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்ற, எதிர்ப்பு குரல், மேலும் வலுப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 12 ஆம் தேதியன்று தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை தலைவர் த.வெள்ளையன் கடை அடைப்பு போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது 21 அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற மேற்கூறிய 21 அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது












Click it and Unblock the Notifications