கலாம் மறைவு.. தமிழகத்தில் நாளை கடைகள் அடைப்பு.. கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் துக்கம் அனுசரிப்பு
சென்னை : குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை (ஜூலை 30) கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவரும், விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் பிதாமகனுமான அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 30-ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையில் இணைந்த வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டும்.
வணிகர்கள் தங்கள் கடைகளை அடைப்பதுடன், அந்தந்தப் பகுதிகளில் மௌனமாக ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது..
நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் அப்துல் கலாம்.அவரது உடல், வரும் 30-ஆம் தேதி ராமேசுவரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 30-ஆம் தேதி காலை 6 மணி முதல் நல்லடக்கம் முடியும் வரை வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டும்.
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களும், வணிகர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை, கடலுக்குச் செல்வதில்லை என்று ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
அப்துல் கலாம் திங்கள்கிழமை காலமானதையொட்டி, துக்கம் அனுசரிக்கும் வகையில், ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே, இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், அவரின் உடலை நல்லடக்கம் செய்யும் வரை மீன்பிடிக்கச் செல்வதில்லை என மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications