அட்சய திரிதியை அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா?
சென்னை: அட்சய திரிதியை அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இல்லை வீட்டிற்கு ஐஸ்வரியத்தையும், மங்கலத்தையும் கொடுக்கும் எந்த பொருட்களையும் வாங்கலாம்.
அட்சய திரிதியை நாளை(மே 02 ம் தேதி) வருகின்றது. அன்றைய தினம் தங்கம் அல்லது வெள்ளி வாங்கி நமது வீட்டின் பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டு அதை பீரோவில் வைத்தால் செல்வம் குவியும் என்ற பேச்சு உள்ளது.
இந்து சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது என ஜோதிடர் ஒருவரிடம் கருத்து கேட்ட போது அவர் கூறுகையில்,
அட்சய திரிதியை அன்று காலையில் குளித்து முடித்து வீட்டில் லட்சுமி பூஜை செய்ய வேண்டும். பின்பு குபேர பூஜை செய்ய வேண்டும். குபேர வழிபாட்டிற்கு வெள்ளிக்கிழமையும், அவர் அவதரித்த வியாழக்கிழமை அன்றும், அவரது திசையான வடக்கு திசையும், அவரது நட்சத்திரமான பூசநடச்திரம் நாளிழில் வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
லட்சுமி மற்றும் குபேரனை வழிபாடு செய்பவர்களுக்கு மங்காத புகழும், வான் உயர செல்வமும், கடல் போன்ற லட்சுமி கடாச்சமும் இருக்கும். பணப் பற்றாக்குறை என்ற வார்த்தையே இருக்காது. சமூகத்தில் செல்வாக்கும் உயரும்.
எனவே அட்சய திரிதியை நாள் அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இல்லை. அரிசி, உப்பு, வெல்லம், சர்க்கரை, மஞ்சள் போன்றவைகள் வாங்கலாம். அதிக வசதியுள்ளவர்கள் தான் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவார்கள்.
அட்சய திரிதியை அன்று அரிசி, உப்பு, வெல்லம், சர்க்கரை, மஞ்சள் போன்றவைகள் வாங்க காலை 9 மணி முதல் 10.30 வரையும், பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரையும் உகந்த நேரமாகும். இந்த நேரங்களில் இந்த பொருட்கள் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றார்.