ஏமாற்றுபவர்களுக்கு நீங்கள் யார் என்பதை காட்டுங்கள்: ஏற்காட்டில் கனிமொழி பேச்சு
சேலம்: இத்தனை நாட்களாக உங்களை ஏமாற்றுபவர்களுக்கு நீங்கள் யார் என்பதை காட்டுங்கள் என ஏற்காட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார்.
இடைத்தேர்தலையொட்டி திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து அக்கட்சி எம்.பி. கனிமொழி ஏற்காட்டில் உள்ள தும்மல், சிங்காபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
கண்டிக்க வேண்டிய நேரம்
இங்கு நடைபெறப்போவது பொதுத் தேர்தல் அல்ல இடைத்தேர்தல். இருப்பினும் இந்தியாவில் உள்ள அனைவரின் கவனமும் இந்த இடைத்தேர்தல் மீது உள்ளது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தேர்தல் உள்ளது. இந்த ஆட்சியால் நீங்கள் படும் அவதிக்கெல்லாம் இந்த அரசை கண்டிக்க வேண்டிய நேரம் இது தான்.
எச்சரியுங்கள்
ஏற்காடு இடைத்தேர்தல் முடிவால் ஆட்சி மாறிவிடப் போவதில்லை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் நான் கூறவில்லை. ஆனால் நடக்கும் ஆட்சிக்கு நீங்கள் எச்சரிக்கை விடலாம்.
எதிர்க்கட்சிக்கு மரியாதை இல்லை
அதிமுக அரசு கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு பயனளிக்கும் எந்த பணியையும் செய்யவில்லை. சட்டசபையில் எதிர்கட்சிக்கு மரியாதையே இல்லை. சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர்களால் பேச முடியாத நிலை உள்ளது.
தேமுதிக
எதிர்கட்சி என்ற ஒரே காரணத்திற்காக தேமுதிக மீது 97 வழக்குகள் பாய்ந்திருக்கிறது. மேலும் அந்த கட்சி தலைவர் விஜயகாந்த் மீதும் வழக்குகள் போடப்படுகிறது. ஒரு காலத்தில் பாமக அதிமுகவோடு தானே இருந்தது. ஆனால் இன்று பாமக மீது அதிமுக தேசிய பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது.
வீரபாண்டி ஆறுமுகம்
வீரபாண்டி ஆறுமுகம் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. எந்த பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அவர் மீது 75 வயதில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அவர் எத்தனை சிறைச்சாலைகளுக்கு இழுத்தடிக்கப்பட்டார் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இலங்கை தமிழர்கள்
ஒரு நாள் சட்டசபையில் அவசர கூட்டம் கூட்டி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். மறுநாளே இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னத்தை இடிக்கிறார்கள். இதையும் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மின்வெட்டு
அதிமுக அரசு பொறுப்பேற்றதும் பால், பேருந்து மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிவிட்டதாக அக்டோபர் மாதம் முதல்வர் தெரிவித்தார். ஆனால் தற்போதோ பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் 6 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
யார் என்பதை காட்டுங்கள்
ஏற்காட்டில் தற்போது வேண்டுமானால் தடையில்லா மின்சாரம் கிடைக்கலாம். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மின்வெட்டு ஏற்படும். இத்தகைய ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க இந்த இடைத்தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு. திமுக வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் இத்தனை நாட்களாக உங்களை ஏமாற்றுபவர்களுக்கு நீங்கள் யார் என்பதை உணர்த்துங்கள். அதிமுக ஆட்சிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்க இந்த இடைத்தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு. அந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக வேட்பாளர் மாறனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.