அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும்: சொல்கிறார் சு.சாமி
சென்னை: அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என்று பாஜகவில் தனது ஜனதா கட்சியை இணைத்துக் கொண்ட சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே பாஜக மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன். என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று தெரியவில்லை. அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யட்டும். அது முடிந்து போன கதை.

அழகிரி, ஸ்டாலின் மோதல் திராவிட இயக்கங்கள் அழிந்து போவதற்கான அறிகுறி. ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிந்துவிட்டது. அதே போன்று திமுகவும் அழியும் என்றார்.
சாமிக்கு கண்டனம்:
சுப்ரமணியம் சுவாமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் இஸ்மாயில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சமூக நீதியின் அடிப்படையில் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள இடஓதுக்கீட்டு உரிமைக்கு எதிராக கருத்து தெரிவித்த சுப்ரமணியம் சாமியை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.
பல்வேறு ஜாதி, மத, இனத்தை சார்ந்த மக்கள் வாழும் நமது நாட்டில் சுய லாபத்திற்காக மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாசிச சக்திகள் தொடர்நது முயற்சி செய்து வருகிறார்கள்.
நமது நாட்டில் அனைத்து சமூக மக்களும் சமமான வளர்ச்சியை அடைய இடஒதுக்கீடு என்பது இன்றியமையாதது. அரசு நியமித்த பல்வேறு கமிஷன்கள் முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்து அவர்களின் நிலையில் முன்னேற்றம் மிகவும் அவசியம் என்றும் அவர்களின் நிலையில் முன்னேற்றம் கொண்டு வர இடஒதுக்கீடு என்பது அவசியமானது என்றும் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான இது போன்ற சுப்ரமணியம் சாமியின் கருத்துக்கள் அவரது சிறுபான்மை விரோத போக்கையே தெளிவு படுத்துகிறது. மேலும், சுப்ரமணியம் சாமி போன்றவர்களும் அவர் புதிதாக இணைந்துள்ள பா.ஜ.க.வும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு என்ற கோரிக்கைகள் எழும் போது மட்டுமே இடஒதுக்கீட்டிற்கு எதிரான குரல்களை எழுப்பி வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சுய லாபத்திற்காக மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் இதுபோன்ற பாசிச சக்திகளை மக்கள் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டு கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications