சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேரின் பின் மண்டையிலும் பலத்த காயம், அது கொலையே: பெற்றோர்
விழுப்புரம்: தற்கொலை செய்து கொண்ட எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேருக்கும் பின் மண்டையில் அடிபட்டுள்ளதால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தால் பாலியல் கொடுமை உள்பட பல கொடுமைகளுக்கு ஆளாவதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 மாணவிகளின் பின் மண்டையில் பலத்த காயம் உள்ளது. அது எப்படி தற்கொலை செய்து கொண்டால் சொல்லி வைத்தது போன்று 3 பேருக்கும் ஒரே மாதிரியாக பின் மண்டையில் அடிபடும் என்று அவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எங்கள் மகள்கள் தற்கொலை செய்யும் ஆட்கள் இல்லை. அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் தான் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று மாணவிகளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்ட எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரிக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதற்கிடையே முதலில் மாணவி சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவிகள் இறந்தது தொடர்பாக கல்லூரியின் தாளாளரின் மகன் சுவாக்கர் சர்மா, விடுதி பணியாளர்களான சுமதி (34), லட்சுமி (37), கோட்டீஸ்வரி (24) ஆகிய 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications