நீர் அடித்து நீர் விலகுமா? பனையூர் பாபு விலகல்! முடிவை மதிக்கிறேன்! ஆனால்.. சிந்தனை செல்வன் அட்வைஸ்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகும் முடிவை பனையூர் பாபு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிந்தனைச் செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார். நீர் அடித்து நீர் விலகுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருமைத்தோழர் பனையூர் பாபு தன் முடிவை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும்.

வணக்கம் பனையூர் பாபு, தோழமையில் கண்ணியமும் உறுதியும் மிக்கவர் தாங்கள். கடந்த அயந்தாண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராக அனைத்து விளிம்பு நிலை மக்களுக்கும் செய்யூர் தொகுதிக்கும் தாங்கள் ஆற்றிய நற்பணிகளை நாடறியும். நமது தலைவர் அவர்களும் கடந்த தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அதை மனதார பதிவு செய்து பாராட்டினார் என்பதை தாங்களும் அறிவீர்.
அண்மைகால முடிவுகளின் மீது தாங்கள் வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக்கூடியது அல்ல. ஆயினும் ஒன்றை பணிவுடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்ட கடமை பட்டிருக்கிறேன்.
தலைவரின் எந்த முடிவும் தன்னலம் சார்ந்ததல்ல. ஆயிரமாண்டுகால சமத்துவ கனவுக்காக தன் வாழ்வை தன் இளமையை ஒப்படைத்துக் கொண்டவர் அவர்.
குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் வழிகாட்டிச்செல்லும் ஒரு தாய் சில நேரங்களில் அத்து மீறி ஓடும் குழந்தையின் பின்னால் ஓடி வருவதைப்போல தலைவர் தன் அரசியல் உத்தியை மாற்றி இருக்கிறார். உத்தி மாறினாலும் சாதி ஒழிப்பையும் சனாதன எதிர்ப்பையும் கை விடவா போகிறோம் நாம் ?
நிகழ்ந்து முடிந்திருப்பது அரசியல் மாற்றம் மட்டுமல்ல. இளையத் தலைமுறையினரின் சமூக மாற்றத்திற்கான பெரு விருப்பம் காட்டாற்று வெள்ளமாய் ஜென்சி அலையென வெடித்திருக்கிறது.
எம்ஜிஆர், சிவாஜி போன்ற நாயக பிம்பங்களை மட்டுமே கதாநாயகர்களாக முன்னிறுத்தி வந்த தமிழ் சினிமாவில், நாற்பதாண்டுகளுக்கு முன் கால் தாங்கி நடக்கும் சப்பாணி ஒருவரை கதாநாயகனாக பதினாறு வயதினிலே படம் முன்னிறுத்தி வெற்றி பெற்ற தருணத்தை எண்ணிப் பார்க்கிறேன்.
அதற்குப்பின் தமிழ்ச்சினிமாவின் தடமே மாறிப் போய் விட்டது. அந்த திரைப்படம் வெற்றிபெற்றது முந்தைய கதாநாயகர்கள் மீதிருந்த வெறுப்பில் அல்ல. மரபான வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்ற வேண்டுமென்ற இளைய தலைமுறையின் தாகத்தால்.
தமிழகத்தில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் அரசியல் மாற்றங்கள் வியத்தகு கோணத்தில் அரங்கேர உள்ளதை அவதானிக்க முடிகிறது.
மொத்த அரசியல் போக்கும் சமூக மதிப்பீடுகளும், வியத்தகு பாதையில்
நம்மால் பின் தொடர இயலா வண்ணம் மாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் தலைவர் திருமாவளவனின் கரங்களை இறுக பற்றிக் கொள்வதே சரியென எனக்கு படுகிறது.
அன்புள்ள பாபு...
அண்ணனிடம், நம் தலைவரிடம் உங்கள் வருத்தங்களை விமர்சனங்களை தாராளமாக முன் வையுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மனம் விட்டு பேசாதவரா நம் தலைவர்.
எனக்கு உடன்பாடில்லையெனினும் தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆயினும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீரடித்து நீர் விலகுமா என்ன !
தோழமையுடன்
சிந்தனை செல்வன்
இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications