விமர்சனம் செய்த தம்பிகளை விரைவில் முகநூலில் சந்திப்பேன் - சிவகுமார்
முகநூலில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன் என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.
கொங்கு மண்ணில் பிறந்த மாவீரன் தீரன் சின்ன சின்னமலை மற்றும் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் ஆகிய இருவரைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை கடந்த சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார் சிவகுமார். நடுநிலையான வரலாற்றுப் பதிவான அவற்றுக்கு, சிலர் உள்நோக்கம் கற்பித்து விமர்சனம் எழுதினர். சிவகுமார் குடும்பத்தினர், சூர்யா, கார்த்தி குடும்பம் பற்றியெல்லாம் மோசமாகப் பதிவிட்டனர். சாதி வெறியுடன் சிலர் எழுதியது சிவகுமாருக்கு வருத்தம் தர, அவர் முகநூலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இதனை எதிர்ப்பார்க்காத அவரது ஃபாலோயர்கள், 'நீங்கள் பேஸ்புக்கை விட்டு விலகக் கூடாது... தொடர்ந்து எழுத வேண்டும்,' கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் மீண்டும் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "போர்ப்படைத் தளபதி கருபன் சேர்வைத் தேவரை கையாள் (தீரன் சின்னமலை பதிவில்) என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இன்று தனது முகநூலில் கூறி உள்ளார்.
அந்தப் பதிவு:
வரலாற்று ஆய்வாளர் சகோதரி நிகிலா நிகி அவர்களும் மற்ற சகோதரர்களும் குறிப்பிட்டதுபோல போர்ப்படைத் தளபதி கருபன் சேர்வைத் தேவரை கையாள்
என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் வரலாற்றை இன்னும் தெளிவாக படிக்க வேண்டும். முகநூலில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன். நன்றி!