ரூ.30 கோடியில் சூரிய சக்தி மின் ஆலை: வஉசி துறைமுகத்துடன் ஓப்பந்தம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 5 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி செய்வதற்காக வஉசி துறைமுகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்தில் 5 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி ஆலை நிறுவப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஓப்பந்த கையெழுத்தின்போது வஉசி சிதம்பரனார் பொறுப்பு கழக தலைவர் ஆனந்த சந்திரபோஸ், இந்திய சூரிய மின் சக்தி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஸ்வினி குமார், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய மின்சக்தி அமைச்சக செயலாளர் உபேந்திர திரிபாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த திட்டம் இந்திய சூரிய மின்சக்தி நிறுவனத்தின் மூலம் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்படும். 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஆலை மூலம் வருடத்திற்கு 7.5 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும். ஆண்டிற்கு 8025 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் குறைக்கப்படும்.
சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும் இந்த வகை மின்சாரம் வஉசி பொறுப்பு கழக துறைமுகத்தின் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும். வஉசி பொறுப்பு கழக நிர்வாக அலுவலகத்திற்கு 100 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்ன்சக்தி ஆலை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இதனால் வருடத்திற்கு 1.70 லட்சம் யூனிட் மினசாரம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் 400 கிலோ வாட் சூரிய மின்சார ஆலை துறைமுகத்தின் நி்ர்வாக அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த தகவலை வஉசி சிதம்பரனார் துறைமுகம் பொறுப்பு கழகம் அறிவித்துள்ளது.