தமிழ்நாட்டுக்கு சோனியா, ராகுல் காந்தி விரைவில் வருகை
சென்னை: தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க. கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தமிழக காங்கிரஸ் கட்சியும் பிரசாரத்தை தொடங்க ஏற்பாடு செய்து வருகிறது,
39 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேச 100 மேடை பேச்சாளர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். பெருந்தலைவர் காமராஜர் செயல்படுத்திய திட்டங்கள், காமராஜர் பற்றிய சாலமன் பாப்பையா நடத்திய பட்டிமன்றம் ஆகியவை சி.டி.க்களாக தயாரிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல் படுத்திய திட்டங்கள் தமிழ் நாட்டுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உதவிகள் என்ன, ஒதுக்கிய பணம் எத்தனை கோடி என்பது பற்றிய துண்டு பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றை வீடு வீடாக வினியோகம் செய்கிறார்கள். பிரசாரத்தின்போது தங்களை விமர்சிக்கும் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கவும், ராஜீவ் கொலையாளிகள் பற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் கூறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ஒவ்வொன்றுக்கும் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒரே மாவட்டத்தில் சில தொகுதிகள் வந்தால் அதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுகிறார்.
தொகுதி பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பெயர் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் எந்த ஊரில் பிரசாரம் செய்வது,அதற்கான பொதுக்கூட்டம் எந்த இடத்தில் நடைபெறும் என்பதை முடிவு செய்து தெரிவிக்கும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது. சோனியா, ராகுல் பிரசாரம் செய்யும் இடங்களை தேர்வு செய்ததும் மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் அதை உறுதி செய்தபிறகு பிரசார தேதி முடிவாகும். ஏப்ரல் மாதம் 2 வது வாரத்தில் ராகுலும், 3 வது வாரத்தில் சோனியாவும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.