தைரியம் இருந்தால் கருணாஸ் என்னை அடித்து பார்க்கட்டும்... அதிமுக எம்எல்ஏ ஆவேசம்!
தைரியம் இருந்தால் கருணாஸ் என்னை அடித்து பார்க்கட்டும் என அதிமுக எம்எல்ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.
சென்னை: தைரியம் இருந்தால் கருணாஸ் என்னை அடித்து பார்க்கட்டும் என அதிமுக எம்எல்ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் அவர் பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நான் அடிப்பேன் என பயப்படுகிறார் என்றார்.
கருணாஸ் மிரட்டல்
காவல்துறை அதிகாரிகளையும் அவன் இவன் என ஏக வசனத்தில் பேசிய கருணாஸ் பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்துவிடுவோம் என்றும் யூனிஃபார்மை கழட்டி வைத்துவிட்டு வா மோதிப்பார்க்கலாம் என்றும் மிரட்டல் விடுத்தார்.
வழக்குப்பதிவு
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்ய 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கைது செய்ய வேண்டும்
கருணாஸின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர்களும் அதிமுக எம்எல்ஏக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கருணாஸின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சாதி பிரச்சனையை தூண்டியதாக கருணாஸை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆயிரம் கருணாஸ்கள்
மேலும் சர்ச்சைப் பேச்சை கருணாஸ் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் கருணாஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆயிரம் கருணாஸ்கள் உருவாகி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
என்னை அடித்துப்பார்க்கட்டும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடித்தால் வாங்கிக்கொள்வார், ஏனென்றால் அவர் ஏசுநாதரைப் போல. கருணாஸ்க்கு தைரியம் இருந்தால் என்னை அடித்துப்பார்க்கட்டும் என்றும் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.