ரயில்வேயிலும் வடக்குதான் வாழ்கிறது... தெற்கு தேய்கிறது - தென்னக ரயில்வே பயணிகள் குமுறல்!
சென்னை: ரயில்வே துறையில் எந்த திட்டமாக இருந்தாலும் அதில் முதலில் பயன்பெறுவது வடக்கு ரயில்வேதான் என்று தெற்கு ரயில்வே பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த வகையில், தற்போது ரயிலில் முன்பதிவு செய்யும் போது, காத்திருப்போர் பட்டியல் வருகிறது என்றால், அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு குறிப்பிட்ட நாளில் டிக்கெட் முன்பதிவு ஆகவில்லை என்றால், மாற்று ஏற்பாடாக அதே வழியில் செல்லும் மற்றொரு ரயிலில் பயணம் செய்வதற்கு "மாற்று ரயில் தங்கும் வசதி" என்ற திட்டத்தை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

அதற்கான பணியை ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் செய்து வருகிறது. முதல்கட்டமாக, இதற்கான திட்டப்பணியை வடக்கு ரயில்வே பகுதிகளில் செய்து வருகிறது.
ஆன்லைன் முன்பதிவு:
பயணி ஒருவர் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்காக ஆன் லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவருக்கு காத்திருப்பு பட்டியல் வருகிறது என்றால், அவர் அந்த டிக்கெட்டை ரத்து செய்து மற்றொரு ரயிலில் முன்பதிவு செய்ய நினைப்பார்.
மற்றொரு ரயிலில் டிக்கெட் கிடைக்கும்:
ஆனால் இந்த திட்டம் மூலம் அவர் எந்த ரயிலில் செல்ல முன்பதிவு செய்கிறாரோ அந்த ரயிலில் முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் வந்தாலும் அவர் முன்பதிவு செய்துவிட்டு அதே பகுதியில் செல்லும் மற்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு கிடைத்தால் முன்னுரிமை வழங்க அதில் குறிப்பிடலாம்.
முன்னுரிமை உண்டு:
அவ்வாறு குறிப்பிடும் போது ஏற்கனவே அவர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரயிலில் அவருக்கு இருக்கை, படுக்கை வசதி கிடைக்கவில்லை என்றாலும், அதே பாதையில் செல்லும் பிற ரயில்களில் காலியிடங்கள் இருந்தால் அவருக்கு அங்கு டிக்கெட் முன்பதிவு செய்து தரப்படும்.
எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு:
ஒரு பயணி டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் அவருக்கு முன்பதிவு கிடைக்காமல், மாற்று ரயிலில் டிக்கெட் முன்பதிவு ஆகிறது என்றால் உடனே அந்த பயணிக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டத்தில் உள்ள குறைகள், நிறைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இதற்கான முழு தகவல்களையும் ரயில்வே நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் மனக்குமுறல்:
இந்நிலையில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் வடக்கு ரயில்வேயில் செயல்படுத்தப்படுவதால், தென்னக ரயில்வே பயணிகளிடம் ஆதங்கத்தையும், மனக் குமுறலையும் ஏற்படுத்தியுள்ளது.
தெற்கிலும் தொடங்கலாமே:
இந்தத் திட்டத்தை தெற்கு ரயில்வேயிலும் பரீட்சித்துப் பார்க்கலாமே என்று தென்னக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications