தென்மேற்கு பருவமழை மே 28ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லை: தென் மேற்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட நான்கு நாட்கள் முன்னதாக அதாவது மே28ம் தேதியே தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானில் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. அங்கு இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல் கேரளாவிலும் வரும் 28ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த காற்று வீச தொடங்கியுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. பகலிலும் வெயிலும், மாலை முதல் அதிகாலை வரை நல்ல காற்றும் வீசுகிறது. இதனால் காற்றாலைகள் சுழல தொடங்கியுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சீரான மழை இல்லாததால் நெல் உற்பத்தி சீராக நடைபெறவில்லை. இந்தாண்டும் மார்ச் மாதத்தில் இருந்து கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம்103.2 வெப்பம் பதிவானது.
கடந்த மாதம் 4ம் தேதி கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது குமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கத்தை உணர முடியவில்லை.
நெல்லை, குமரி,மாவட்டத்தில் உள்ள அணைகளிலும் கணிசமாக தண்ணீர் நிறைந்தது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் அதன் பின் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன