கேரளாவில் அடுத்த வாரம் தொடங்குகிறது, தென் மேற்கு பருவமழை! தமிழகத்தில் வெயில் குறையும்
சென்னை: அடுத்த வார தொடக்கத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு அதிக அளவில் மழையை கொண்டுவந்து சேர்ப்பது தென் மேற்கு பருவமழை காலம். நான்கு மாதங்கள் நீடிக்கும் பருவமழை ஜூன் 1ம் தேதியையொட்டி கேரளாவில் கால் பதிப்பது வழக்கம். படிப்படியாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பருவமழை பரவும்.

இவ்வாண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக வருகை தந்துள்ளது. இப்படி தாமதமாக பருவமழை தொடங்குவது கடந்த 50 வருடங்களில் இதுதான் முதல்முறை.
இவ்வாரத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் கேரளாவில் காலடி எடுத்து வைக்க உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா இன்று தெரிவித்தார்.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும், படிப்படியாக தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறையும் என்றும், ஸ்டெல்லா கூறினார்.

அடுத்து 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக ஊத்தங்கரை மற்றும் தருமபுரியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் ஸ்டெல்லா மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications