அது ஏன் கண்ணைப் பார்த்து பேசுன்னு சொல்றாங்க???
ஒருவரின் கண்களை பார்த்து பேசுவதுதான் நேர்மையின் அளவீடாக கொள்ளப்படுகிறது.
சென்னை: காதல் மட்டுமில்லை... எல்லாமே கண்களிலிருந்துதான் தொடங்குகிறது. மனதில் உள்ளதை அப்பட்டமாக காட்டும் இயற்கை கண்ணாடிதான் கண்கள். கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம் என்பதால்தான் சங்க இலக்கியங்கள் முதல் ப்ரியா வாரியர் வரை கண்களின் ஜாடைகள் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
அது ஏன் நாம் ஒருவரின் கண்கள் பார்த்து பேச வேண்டும்? நம்முடைய கண்களை எங்கே ஊன்ற வைக்கிறோம் என்பதை வைத்தே நம்மைப் பற்றியும் நாம் சொல்வதைப் பற்றியும் பிறர் முடிவு செய்துவிட முடியும் என்கிறது உளவியல். ஒருவர் தன்னுடைய கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் மேல்நோக்கியோ, அல்லது கீழ்நோக்கியோ பார்த்து கொண்டு பேசுவது என்பது அவரது இயல்பினை சந்தேகப்படும்படியாக கருதப்படுகிறது.
கீழே பார்த்து பேசினால் கெட்டவரா?
வேறு எங்கேயோ பார்த்து பேசினால் அவர் இயல்புக்கு மாறானவர் என்றும் முத்திரை குத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேருக்கு நேர் ஒருவரால் பார்த்து பேச முடியாததற்கு வெட்கம், கூச்சம், தயக்கம், சுபாவம் போன்றவை காரணமாக இருக்கலாம். அதற்காக அவரது குணநலனை முழுவதுமாக சந்தேகப்பட முடியாது.
ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு
என்றாலும் ஒருவர் கண் பார்த்து பேசுவதைதான் பெரும்பாலானோர் ஏன் காவல்துறை உட்பட ஏற்றுக் கொள்ளக்கூடிய அம்சமாக உள்ளது. குற்றவாளிகளிடம் விசாரணை என்பதின் முதல்கட்டமே கண்கள்தானே? அப்படியே நேருக்கு நேர் பார்த்து பேசினாலும், அந்த நபர் என்னமோ கரடுமுரடு நபர் என்றும் சவால் விடும் நபர் என்றும் கருதப்படுகிறார்கள். "யாரைப் பார்த்து பேசுற? பெரியவர்களை நேருக்கு நேர் பார்த்து இப்படி பேசலாமா? இப்படி கேட்கலாமா? இதுதான் மரியாதையா?" என்று எதிர்மறை முத்திரை விழுகிறது. இதுவும் முற்றிலும் தவறான கருத்து. கண்களை பார்த்து பேசுவது ஒரு நன்மதிப்பு அறிகுறி. உங்கள் குணத்துக்கு வலு சேர்ப்பது. ஒருவரின் ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு.
நேர்மையின் அளவீடு
முக்கியமான, நியாயமான, விஷயங்களை ஒருவரின் கண்கள் பார்த்து வெளிப்படுத்தும்போது, அது கூடுதல் பலம் பெறுகிறது. நீங்கள் சொல்ல வரும் கருத்து முழுவதுமாக ஒருவருக்கு புரியவில்லையென்றாலும், நேருக்கு நேர் பார்த்து சொல்லும்போது கண்கள் அந்த கருத்தை அச்சு பிசகாமல் கொண்டு அடுத்தவரிடம் சேர்க்கும். அடுத்தவர் நம் கருத்தை ஏற்கிறார்களா-இல்லையா, நாம் சொல்வதை கவனிக்கிறார்களா-உதாசீனப்படுத்துகிறார்களா? நாம் பேசுவது புரிகிறதா-புரியவில்லையா? இதையெல்லாம் அறியதான் நேருக்கு நேர் பார்த்து, கண்களை பார்த்து பேசுவது மதிப்பிற்குரிய ஒன்றாக கையாளப்படுகிறது. எனவே மற்றவர் கண் பார்த்து பேசுவது, ஒரு நேர்மையின் அளவீடாகவே மதிக்கப்பட்டு வருகிறது.
ஆண்களுக்கா, பெண்களுக்கா?
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆராய்ச்சி செய்தார்களாம். அது என்னவென்றால், ஒருவரின் கண்களைப் பார்த்து அவரின் மனநிலையை அறியும் சக்தி ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கு அதிகமா? என்று. கடைசியில் முடிவு, ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அந்த சக்தி அதிகம் என்று தெரியவந்ததாம். இப்போதுதான் ஒன்று புரிகிறது, ஏடாகூடமாக சிறு தவறுகளை செய்துவிட்ட சில கணவன்மார்கள்கூட, மனைவிகளின் கண் ஜாடையிலேயே மாட்டிக்கொள்வது இப்படித்தானோ?
என்னவோ போடா மாதவா!