இன்ஜினியரிங் மாணவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்க பயிற்சி திட்டம்.. சென்னையில் தொடக்கம்!
சென்னை: வளாக நேர்காணலின் போது பொறியியற் கல்லூரி மாணவர்களை தேர்வு செய்ய வைக்கும் புதிய பணிப் பயிற்சி திட்டம் அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளது. இதற்கு பயிற்சியை வழங்கிட ரிவாச்சுர் என்ற புதிய நிறுவனம் இன்று முறைப்படி தொடங்கி உள்ளது.
இதனை தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக்கழகத் தலைவர் முனைவர். சந்தோஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சிப்பணிகளை தொடங்கினார். ஹெக்சாவேர் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் சீனிவாசன் பஞ்சாபகேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
பயிற்சி திட்டம் குறித்து ரிவாச்சுர் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அஸ்வின் கூறியதாவது:
அமெரிக்காவில் கடந்த 8 ஆண்டு காலமாக இயங்கிவரும் வெற்றி சூத்திரமே தற்போது முதன் முறையாக சென்னையில் அரங்கேற்றப்படுகிறது. அடுத்த கட்டமாக நாடெங்கும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் 400 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 40 ஆயிரம் பொறியியற் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன . 99.8 சதவீத மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று விட்டனர்.
அதே போன்று இந்திய மாணவர்களும் வேலை வாய்ப்புகள் பெற்றிட புதிய திட்டம் தற்போது அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கிறது.
இத்திட்டத்தின்படி பயிற்சி பெற்றவர்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். வளாக நேர்காணலின் போது இந்த சான்றிதழ்கள் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும் .
அமெரிக்காவில் இந்த பயிற்சி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இயங்கும் முக்கியமான 30 நிறுவனங்களில் 20 பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் பிரபலமாக விளங்கி வருகின்றன. எனவே எங்கள் நிறுவனம் இந்திய மாணவர்களுக்கு புதிதே தவிர வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிது அல்ல.
இந்த பயிற்சி திட்டத்தில் முதல் கட்டமாக வேல்ஸ் பல்கலைக்கழகம் , பி எஸ் அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகமும் , ஜேப்பியார் பொறியியற் கல்லூரி, சென்னை இன்சஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கற்பக வினாயகம் பொறியியற் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் பயிற்சி எடுத்து கொள்கின்றனர்.
இரண்டாண்டு பயிற்சி திட்டமாக இந்த புதுப்பாணி அமைய உள்ளது. பொறியியற் கல்லூரி மாணவர்களில் மூன்றாம் ஆண்டு , நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். வலைதளம் வாயிலாகவும் நேரடி சந்திப்புகள் மூலமாகவும் இருமுனை பயிற்சிகள் ஒவ்வொரு கல்வி கூடத்திற்கும் வழங்கப்படும்.
தொழில் நிறுவனங்களில் வேலைக்குத் தேர்வாகும் புதிய பட்டதாரிகளுக்கு 6 மாதகால பயிற்சிகள் சம்பளத்துடன் கூடியதாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் தான் அந்த மாணவர் அந்நிறுவனத்தின் பணிகளில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார். எங்கள் நிறுவனப்பயிற்சிகள் பெறுகின்ற மாணவர்களோ நேரடியாகப் பணிகளில் அமர்த்தும் அளவுக்கு தயார் நிலைக்கு வந்து விடுவர்.
இதனால் தொழில் நிறுவங்களுக்கு 6 மாதச் சம்பளம் மிச்சமாகி விடுவதுடன் 6 மாத காலத்துக்கும் முன்னதாகவே வேலை வாங்கக்கூடிய வாய்ப்பு நிறுவனங்களுக்குக் கிடைத்து விடும். எனவே தான் ரிவாச்சுர் பயிற்சி பெற்ற மாணவர்களைத் தேர்வு செய்ய தொழில் நிறுவங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
வாரம் ஒரு முறை நேரடி சந்திப்புப் பயிற்சி என்றும், வலைத்தளம் வாயிலாகத் தினந்தோறும் போதனை என்பதன் மூலமாக மாணவர்கள் மிகச் சிறந்த தொழில் நிபுணர்களாகும் அடிப்படை தகுதியைப் பெற்று விடுவர்.
நேரடிப் பயிற்சிக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெரும் மாணவர்கள் என்பதனைப் பொருத்தவரை 1:20 என்ற விகிதாசாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மாணவர்கள் இத்திட்டத்தின் படி தரம் உயர்த்திக் கொள்ள அந்தந்த கல்வி நிறுவன ஆசிரியர்களும் ஒத்துழைப்புகள் வழங்குவர். இதற்கு ஏற்றதாக அந்தந்த கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு தொழில் நிறுவனங்களும் 'ப்ராஜெக்ட்' என்ற வகையில் சில ஆய்வுத்திட்டங்களை வகுத்து வைத்துள்ளன. இத்திட்டங்கள் தான் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு இப்பயிற்சியின் மூலம் ஈடுபாடு காட்டப்படும். இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.