தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை... நாளை அரசியல் கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை!
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பத்ரா சென்னை வந்துள்ளார்.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா சென்னை வந்துள்ளார். அவர் நாளை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. வருகிற வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் வேட்பாளர்கள் பெயர் பொருத்தும் பணி முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளன.

15 கம்பெனி சிஆர்பிஎஃப்
மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக இன்று ஆர்கே நகர் தொகுதியில் சிஆர்பிஎஃப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. கண்காணிப்புப் பணியில் 15 கம்பெனி சிஆர்பிஎஃப் படைகள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம் 20ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் தரப்படுகின்றனவா என்றும் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை வந்தார் தேர்தல் சிறப்பு அதிகாரி
இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் ஆணைய விதிமுறைகள் முழுவதும் கடைபிடிக்கப்படும் அரசியல் கட்சியினர் மாறி மாறி புகார் கூறுகின்றனர், புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நாளை ஆலோசனை
இதனிடையே சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா நாளை ஆர்கே நகர் தேர்தல் களத்தில் இருக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலை இடையூறுகள் இன்றி சிறப்பாக நடத்த அரசியல் கட்சியினரை அவர் கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications