சினிமா சான்ஸ்: பெங்களுர் பெண்ணை ஏமாற்ற முயன்ற சென்னை சாப்ட்வேர் என்ஜினியர்
சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி பெங்களூர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சென்னயைச் சேர்ந்த என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்த என்ஜினியர் கோகுல்நாத் பார்த்திபன். திருமணமான அவர் சங்கீதா மோகன் என்ற போலி பெயரில் ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கியுள்ளார். அவர் ஃபேஸ்புக்கில் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இன்டீரியர் டிசைனரிடம் தான் ஒரு பிரபலமான மாடல் மற்றும் இயக்குனர் என்று கூறி நட்பு பாராட்ட முயன்றுள்ளார்.
தனக்கு கமல் ஹாஸன், நடிகை ஸ்ரேயா சரண் உள்ளிட்ட கோலிவுட்டின் பெரிய நட்சத்திரங்களை நன்கு தெரியும் என்று கோகுல் ராணியிடம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் சொந்தமாக இன்டீரியர் டிசைனிங் நிறுவனம் வைத்து நடத்தி வரும் ராணி இது குறித்து கூறுகையில்,
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் எனக்கு சங்கீதா மோகன் என்பவரிடம் இருந்து சினிமா வாய்ப்புகள் அளிப்பதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட்கள் வந்தன. முதலில் அவற்றை நான் டிலீட் செய்தேன். அவர் என்னை சென்னைக்கு போட்டோஷூட்டுக்கு வருமாறும் கூறினார். தயாரிப்பாளர்களை அட்ஜஸ்ட் செய்தால் சினிமாவில் சுலபமாக பெரிய ஆளாகிவிடலாம் என்றார்.
இந்நிலையில் டிசம்பர் மாதம் சென்னையில் இருந்து கௌதம் என்பவர் எனக்கு போன் செய்தார். அவர் சங்கீதா மோகன் என்ற பெயரில் என்னுடன் ஃபேஸ்புக்கில் பேசி வருவதாகவும் தனக்கு கமல், ஸ்ரேயாவை தெரியும் என்றும், எனக்கு ஸ்டார் ஆகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 24 பிரேம்ஸ், பேஸ் பிலிம்ஸுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனது தோழி ஒருவர் இதே போன்ற சூழலில் ஏமாந்தார். அதனால் அதே நபராக இருக்கக்கூடும் என்று நினைத்த நான் அவரை போலீசில் காட்டிக் கொடுக்க முடிவு செய்தேன். அவரிடம் பேசி நடிக்க விருப்பம் இருக்கிறது என்று தெரிவித்தேன். இந்நிலையில் இது குறித்து துணை கமிஷனர் ஹேமந்த் நிம்பல்கரிடம் தெரிவித்தேன். அவர் என்னை அந்த நபருடன் தொடர்ந்து பேசுமாறும், அதை பதிவு செய்யுமாறும் கூறினார். இதற்கிடையே கௌதம் என்னை சென்னைக்கு வருமாறு கூறினார்.
ஆனால் நான் அவரை பெங்களூர் வந்து ஷூட் செய்யுமாறு கூறினேன். பெங்களூருக்கு வர அவர் சம்மதித்தார். ஆனால் பயணம் மற்றும் ஹோட்டல் செலவுகளை நான் ஏற்க வேண்டும் என்றார். அவரது ஹோட்டல் அறைக்கு மாடர்ன் மற்றும் பாரம்பரிய உடைகளை எடுத்துக் கொண்டு வருமாறு தெரிவித்தார். மேலும் அவருடன் ஒரு நாள் படுக்கையை பகிருமாறும் கூறினார்.
இதையடுத்து அவர் கடந்த 22ம் தேதி பெங்களூர் வந்தார். நானும் ஹோட்டல் அறைக்கு சென்று பாரம்பரிய உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். உடனே அவர் என்னை மாடர்ன் டிரஸ் போடச் சொல்லி ஆடையை அவிழ்க்க வந்தார். அவர் ஏற்கனவே தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டார். உடனே நான் டாய்லெட் போக வேண்டும் என்று கூறி சென்று ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்து கௌதமை கைது செய்து, அவர் வைத்திருந்த கேமரா மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் தான் கௌதமின் நிஜமான பெயர் கோகுல்நாத் பார்த்திபன் என்றும், அவர் டிசிஎஸ் ஊழியர் என்றும் தெரிய வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த அவர் இது போன்று வேறும் 4 பெண்களையும் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது கோகுல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் கோகுல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.