எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 19 நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டகாசம்
நாகப்பட்டினம்: கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 19 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகை, ஜெகதாபட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டு வரும் நிலையில் மீன்பிடிபடகுகளை வழங்க இலங்கை அரசு மறுக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை மற்றும் டி.ஆர்.பட்டணத்தை சேர்ந்த 19 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் சென்றனர். அவர்கள் இலங்கை அருகே உள்ள கட்டைக்களம் என்ற பகுதியில் இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 19 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவரவில்லை. நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை பிடித்து சென்ற மீனவர்கள் யார், யார் என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறார்கள்.
மீனவர்கள் கைது சம்பவம் தொடர்வது மீனவ மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications