எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.15 கோடி அபராதமா? இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மழுப்பல் பதில்
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ15 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை டைரக்டர் ஜெனரல் எம்.சி.எல். பெர்ணான்டோ கூறியது குறித்து அந்நாட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மழுப்பலான பதிலையே கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தாலே எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை கடல் எல்லைக்குள் இனி அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ15 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை இயக்குநர் எம்.சி.எல். பெர்ணான்டோ கூறியிருந்தார். இது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஹக்கீம் கூறியதாவது:
இந்திய அரசுடன் நல்ல சுமூகமான உறவு உள்ளது. இது நல்ல முறையில் நீடிக்க வேண்டும் என்று இருநாட்டு அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க சுமூகமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் நல்ல தீர்வு ஏற்படும்.
இலங்கை போர் குறித்து நடக்கும் உள்நாட்டு விசாரணையில் போர்குற்றம் நடந்திருப்பதாக விசாரணைக்குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இதில் இலங்கை அரசு உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களை மீண்டும் தமிழர்களுக்கே திருப்பி தர சிறிசேனா அரசு உறுதியாக உள்ளது. ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கையில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் ஆகி உள்ளார். இது ஆரோக்கியமான அரசியல். அவருடன் கலந்து பேசி பறிக்கப்பட்ட இடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறினார்.
அப்போது இலங்கை அதிகாரி எல்லை தாண்டினால் ரூ15 கோடி அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மழுப்பலாக, இருநாட்டு மீனவர் பிரச்சனை தொடர்பாக அரசுகள் நல்ல முறையில் பேசி விரைவில் தீர்வு காணும் என மழுப்பலான பதிலையே கூறினார் ஹக்கீம்.












Click it and Unblock the Notifications