சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்கள் மயக்கம்... தொடரும் போராட்டம்
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி கோரி டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையாகும். ஒரே பணி, ஒரே தகுதி உள்ளவர்களுக்கு உரிய ஊதியத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை முதல் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் நான்காவது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற ஆசிரியர் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசி என்ற பெண் ஆசிரியை மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் போனதால் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்கின்றனர்.
இந்த உண்ணாவிரதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.6.2009க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 1.86 சதவீதம் உயர்த்தி தொடக்க கல்வித்துறை வழங்கி வருகிறது.
அதே சமயம் 1.6.2009க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட 22000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.8000 இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றும் ரெக்ஸ் ஆனந்த குமார் தெரிவித்தார்.
கோரிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் ராபர்ட், அரசு தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களாக, 2009ல், 22 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். எங்களுக்கு காலமுறை ஊதியத்தில், 5,200 ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டது.

எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக நியமனம் ஆனவர்களுக்கு, எங்களை விட, 3,000 ரூபாய் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், ஒரே கல்வித் தகுதியில் ஒரே விதமான பணிகளையே செய்கிறோம். எனவே, இந்த பாரபட்சத்தை நீக்க நடவடிக்கை எடுக்கும் வரை, போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஜாக்டோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஜாக்டோ சங்கத்தினரும் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் மாநில அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு நிலவுகிறது. எனவே ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications