தமிழகத்தில் ஏடிஎம்கள் ஆங்காங்கே திறப்பு... ஆறுதலடைந்த மக்கள்
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் ஏடிஎம்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் செல்கின்றனர்.
சென்னை : 1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு நாட்கள் மூடப்பட்ட ஏடிஎம்கள் இன்றுமுதல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பல ஏடிஎம்களில் பணம் நிரப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.
நாடு முழுவதும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை அடுத்த 50 நாட்களுக்குள் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் பொதுமக்கள் மாற்றம் செய்துகொள்ளலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நவம்பர் 9ம் தேதி வங்கிகள் விடுமுறை விடப்பட்டன. கடந்த 2 தினங்களாக ஏடிஎம் இயந்திரங்களும் செயல்படவில்லை.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை வைக்க வசதியாக கடந்த இரண்டு நாள்களாக ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டன. அதாவது, புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டன.
நேற்றுமுதல் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வங்கி வாசலில் கூட்டம்
வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், அவர்களுக்குப் போதிய பண பரிவர்த்தனை அளிக்க முடியாமல், வங்கி நிறுவனங்கள் திணறுகின்றன. இத்தகைய சூழலில், இன்று முதல், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே அக்கம் பக்கத்தில் உள்ள ஏடிஎம் மையங்களை மக்கள் எட்டிப்பார்த்து வருகின்றனர்.
ஏடிஎம் ஏமாற்றம்
நாடு முழுவதும் ஏடிஎம் மையங்கள் இன்று காலை முதல் செயல்பட தொடங்கும் என்றும் பொதுமக்கள் ஏடிஎம் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறினாலும் இன்னும் பல ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் ஏடிஎம் வாசலில் காத்திருந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் ஏடிஎம்கள்
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 23,728 ஏடிஎம் மையங்கள் செயல்படுகின்றன. முக்கிய நகரங்களில் உள்ள ஏடிஎம்கள் இன்று முதல் செயல்படத்தொடங்கும் என்றும் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் எனவும் வங்கிகள் சார்பில் எஸ்எம்எஸ் அனுப்பட்டதால் பலரும் காலை 5 மணியில் இருந்தே ஏடிஎம் வாசலில் காத்திருந்தனர். இந்த நிமிடம் வரை பல ஏடிஎம் திறக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.
100,50 ரூபாய் நோட்டுகள்
இன்று ஏடிஎம் மையங்கள் செயல்பட்டாலும் பெரும்பாலான மையங்களில் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே நிரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2000 ரூபாய் மட்டுமே ஒருவர் ஒருநாளைக்கு எடுக்க முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேவைக்கட்டணம் இல்லை
இதனிடையே ஏடிஎம் சேவைக்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என வங்கி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்பேரில், டிசம்பர் 31ம் தேதி வரை பொதுமக்கள் தங்கு தடையற்ற ஏடிஎம் சேவை மேற்கொள்ளலாம் என்றும், அதற்காக, கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கி நிறுவனங்கள் பலவும் தெரிவித்துள்ளன.
விடுமுறை கிடையாது
அத்துடன், அடுத்த ஒரு மாதத்திற்கு, வார விடுமுறை மற்றும் அத்தியாவசிய விடுமுறைகள் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும், தேவையற்ற கூடுதல் விடுமுறைகளுக்கு அனுமதி இல்லை என்றும், சம்பந்தப்பட்ட வங்கிகள், ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன. வங்கிகளில் இன்றும் கூட்டம் அலைமோதும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் இயங்கும் ஏடிஎம்கள்
இதனிடையே மதுரையில் ஒரு சில இடங்களில் ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒருவருக்கு ஒரு கார்டுக்கு 100 ரூபாய் நோட்டுக்களாக 2000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.
சென்னையில் சில இடங்களில் திறப்பு
இதனிடையே பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் சென்னையில் ஒரு சில இடங்களில் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் செயல்படுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துச் செல்கின்றனர்