சபாநாயகர் சாதியை குறிப்பிட்டு பேசியதில் உள்நோக்கம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக சட்டசபையில் சபாநாயகர் சாதியை குறிப்பிட்டு பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சபாநாயகர் தனபால் சாதியை குறிப்பிட்டு சட்டசபையில் பேசியதில் உள்நோக்கம் உள்ளதாக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறைப்படி கடிதம் வரவில்லை. பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக மட்டுமல்ல அதிமுக உறுப்பினர் செம்மலையும் கோரிக்கை விடுத்தார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது என சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக மறுத்தார். இதையடுத்து அவைக் காவலர்களால் நாங்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டோம்.

ஒட்டு மொத்தமாக சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற முடியாது என்றும், உறுப்பினர்களின் பெயரை சொல்லித்தான் வெளியேற உத்தரவிட முடியும் என்றும் விளக்கம் அளித்தோம். இதனிடையே எதிர் கட்சிகளே இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சபாநாயகர் ஜாதியை குறிப்பிட்டு பேசினார். அவர் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன்.
மெரினாவில் நடைபெற்ற அறப்போராட்டத்துக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அறவழியில் போராடிய எங்களை காவல்துறை கைது செய்ததாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் சட்டப்பேரவை சம்பவங்கள் குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட நேரம் கேட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications