ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்ம மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்.. மு.க. ஸ்டாலின் கோரிக்கை
ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.
சென்னை: தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் டெல்லி ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பயின்று வந்தார். டெல்லியில் உள்ள முனிர்கா விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களிடம் உறங்க செல்வதாகக் கூறியுள்ளார்.

பின்னர், அவர் தனது அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் அறையில் பார்த்த போது முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட நிலையில், தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று அவரது தந்தை ஜீவானந்தம் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முத்துக்கிருஷ்ணன் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார். தொடர்ந்து தமிழக மாணவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்து வருவதை கண்டித்த ஸ்டாலின், முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications