கடலூரில் சாப்பிட்ட இறால் குழம்பால் அஜீரணம்... நெஞ்சு எரிச்சலால் அவதிப்பட்ட ஸ்டாலின்
புதுச்சேரி: கடலுார் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்து இரவில் கார் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அவருடன் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வமும் வந்தார். புதுச்சேரி ராஜிவ் சிலை சிக்னல் அருகில் உள்ள அக்கார்டு ஓட்டலில் ஸ்டாலின் இரவு உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுச்சேரியை நெருங்கிய நிலையில் ஸ்டாலினுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கார்டு ஓட்டலில் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
உடனடியாக இதய நோய் நிபுணர் டாக்டர் மணிமாறன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் ஓட்டலுக்கு வரவழைக்கப் பட்டனர். அவர்கள் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
இ.சி.ஜி., கருவி வரவழைக்கப்பட்டு, அவரது இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் அது நெஞ்சு வலி அல்ல, நெஞ்சு எரிச்சல் என்பது தெரிய வந்தது.
கடலுார் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஸ்டாலின் மதியம் இறால் குழம்புடன் உணவு சாப்பிட்டுள்ளார். அது அஜீரணம் ஆகாமல், வாயு தொல்லையை உண்டாக்கி, நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவா, வடக்கு அமைப்பாளர் எஸ்.பி.,சிவக்குமார் ஆகியோர் ஸ்டாலினை நலம் விசாரித்தனர்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் ஓட்டலில் தயிர்சாதம் சாப்பிட்ட ஸ்டாலின், 10.05 மணிக்கு புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications