ஸ்டாலினை வைத்த கண் வாங்காமல் பார்த்த கோ.சி.மணியின் கொள்ளுப்பேரன்! பெயர் சூட்டு நிகழ்வில் ருசிகரம்!
சென்னை: திமுகவின் மூத்த முன்னோடியும், கருணாநிதியின் தளகர்த்தர்களில் ஒருவருமான மறைந்த கோ.சி.மணியின் கொள்ளுப்பேரனுக்கு மதியரசன் என பெயர் சூட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோ.சி.மணியின் கொள்ளுப்பேரனுக்கு கருணாநிதி என ஸ்டாலின் பெயர் சூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத பெயரான மதியரசன் என சூட்டினார்.

அண்ணா ஒருமுறை தனது சுற்றுப் பயணத்தின் போது, கும்பகோணம் அருகே உள்ள மேக்கிரிமங்கலம் உள்ள கோ.சி.மணி வீட்டிற்கு சென்றார். அப்போது கோசி மணி வீட்டில் இல்லாததால், அவருடைய வயலுக்கே சென்று பணியாற்றிக் கொண்டிருந்த மணியை சந்தித்தார் என்பது வரலாறு.
அதேபோல் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் கருணாநிதி சுற்றுப் பயணம் என்றால், கோ.சி.மணி மேடையில் இல்லாமல் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றியது கிடையாது.
பொதுக்குழுவிலோ, நிர்வாகிகள் மத்தியிலோ கருணாநிதியை பற்றி யாராவது குறை காண முனைந்தால், அதனை எதிர்த்து ஆவேசத்துடன் முதல் குரல் எழுப்புவது கோ.சி. மணியாகத் தான் இருப்பார்.
இதனால் தான் கோ.சி.மணி மறைந்த போது, ''எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்?'' என உருக்கமான இரங்கல் விடுத்திருந்தார் கருணாநிதி.

கோ.சி.மணியின் மகன்களும், பேரன்களும் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டாத நிலையில் அவரது கொள்ளுப்பேரனுக்கு மதியரசன் என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ஸ்டாலின்.
இதனிடையே பெயர் சூட்டும் நிகழ்வின் போது ஸ்டாலினை வைத்த கண் வாங்காமல் பார்த்த கோ.சி.மணியின் கொள்ளுப்பேரனால் சிரிப்பலை ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications