கருணாநிதி மீது நடவடிக்கை எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு சென்ற திமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்றினர்.
இந்நிலையில் அவைக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் தொடர்பாக உரிமைக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை பற்றி திமுக உறுப்பினர் துரைமுருகன் பேச முயன்றார். அவரை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. அவருக்கு பேச அனுமதி அளிக்கும்படி நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் சபாநாயகர் எங்களை வெளியேற்றம் செய்து விட்டார். கருணாநிதி மீது உரிமை மீறல் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அமைச்சர் வைத்திலிங்கம் பற்றி கருணாநிதி கட்டுரை எழுதி இருந்தார். அதன் மீது அவைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரம்பு மீறி முடிவு எடுத்து அந்த அறிக்கையை இந்த அவையில் வைத்துள்ளது. ஏற்கனவே இந்த அரசு எதிர்க்கட்சிகள் மீதும், ஏடுகள் மீதும் அவதூறு வழக்குகளை தொடுத்துக் கொண்டே வருகிறது. அவை உரிமைக் குழுவுக்கு கருணாநிதி ஏற்கனவே விளக்க கடிதம் எழுதிய பிறகும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்த சட்டசபை கூட்டம் 3 நாட்கள் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். அதில் 2 நாட்கள் விவாதமும், 1 நாள் பதிலுரையும் என்று அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை 5 நாட்கள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் அதை ஏற்கவில்லை. ஆனால் அவை உரிமைக்குழு கருணாநிதி மீது அவசர அவசரமாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
சந்தனத்தை அரைக்க அரைக்கத்தான் மணம் வீசும். அதனால் கருணாநிதி மீதான இந்த நடவடிக்கை அவரை மேலும் உயர்த்தும். இதுபற்றியெல்லாம் பேசுவதற்கு நாங்கள் அனுமதி கேட்டோம். ஆனால் பேசுவதற்கு அனுமதி தராமல் மறுத்து சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதே அமைச்சர் வைத்திலிங்கம்தான் சத்துணவுத் திட்டத்தை பிச்சைக்காரர் திட்டம் என்று கூறினார். இது தொடர்பாக அவை உரிமை மீறல் குழுவிடம் நடவடிக்கை எடுக்க கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால் அதற்கு பதில் இல்லை.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி போக்குவரத்து ஊழியர்கள் பற்றி ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதுபற்றி எ.வ.வேலு அவை உரிமைக் குழுவிடம் நடவடிக்கை எடுக்க கடிதம் கொடுத்தார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கருணாநிதி மீது நடவடிக்கை எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. வெட்கக்கேடானது என்று ஸ்டானின் கூறினார்.