ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசனை சந்தித்த மு.க.ஸ்டாலின் – அரசியல் இல்லையாம்!
சென்னை: தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார். மு.க.தமிழரசுவின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மு.க.ஸ்டாலின் எங்கள் வீட்டுக்கு வந்ததில் அரசியல் கிடையாது. குடும்ப நண்பர்கள் என்பதால் சந்தித்துக் கொண்டோம். அரசியலில் எங்களுக்கும் அவருக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஆனாலும் நாங்கள் ஒரே குடும்பம் என்றார்.
ஜெ.வுக்கு தண்டனை உறுதி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீடு தீர்ப்பு எப்படி அமையும் என்ற கேட்டதற்கு பதிலளித்த இளங்கோவன், ஜெயலலிதாவுக்கு கண்டிப்பாக தண்டனை உறுதி செய்யப்படும் என்றார்.
சுருட்டல் அமைச்சர்கள்
ஜெயலலிதா வெளியில் வருவதற்குள், எல்லா அமைச்சர்களும் இருப்பதை சுருட்ட முயற்சிக்கிறார்கள். அதனால்தான் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். இதனால்தான் முத்துக்குமாரசாமி போன்றவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
அனைத்திலும் ஊழல்
இந்தியாவில் அதிக ஊழல் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. எல்லா துறையிலும் ஊழல்தான். போலீசாரையும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கேட்டுக்கொள்வதெல்லாம் இப்போதாவது நீங்கள் நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள் எடுப்படியாக செயல்படாதீர்கள்.
கூட்டணிக்கு அச்சாரமா
மு.க.ஸ்டாலின் சந்திப்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா? என்று கேட்டதற்கு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று கூற முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது என்று நழுவலாக பதிலளித்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
தலைவர்கள் சந்திப்பு
சில தினங்களுக்கு முன்னர்தான் டாக்டர் கிருஷ்ணசாமி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து அவர் ஜி.கே.வாசனையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் சகோதரரின் மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையும், ஜி.கே.வாசனையும் சந்தித்துப் பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.