திமுக ஆட்சிக்கு வந்தால் லாரி ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் - ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் லாரி ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூலில் பதிவிட்டுள்ளது:
"நமக்கு நாமே" பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னை, மதுரவாயலில் லாரி மற்றும் டிரக் ஓட்டுனர்களை நேற்று நேரில் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினசரி தாங்கள் எதிர்கொண்டு வரும் துயங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டதில், போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நெடுஞ்சாலைகளில் தரும் அளவுக்கதிகமான தொல்லைகள் அதிகமாக இடம்பெற்றன. அவர்களது சரக்கு வாகனங்கள் தொடர்ந்து செல்லவும், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்படாமல் இருக்கவும், இடைவிடாமல் ஆங்காங்கே உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டனர்.
மேலும், லாரி ஓட்டுனர் உரிமங்களை எடுக்க 8ம் வயது வரை படித்திருக்க வேண்டும் என்று ஏற்படுத்தியுள்ள விதியை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதிமுக அரசிடம் தங்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும் என பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
லாரி ஓட்டுனர்கள் முன்வைத்த கோரிக்கைகளில், தனியாக தங்களுக்கு ஒரு நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. அவர்களது கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசியபோது, திமுக அரசு பொறுப்பேற்றதும் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு, லாரி ஓட்டுனர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications