கொளத்தூர் தொகுதியில் டெங்கு நோயாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் ஆறுதல்!
தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை : கொளத்தூர் தொகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதித்தவர்களை சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவர்களுக்கு போதமான வசதிகள் உள்ளனவா என்று ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ஸ்டாலின் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.
சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
காலை 9.30 மணிக்கு செம்பியம் வந்த ஸ்டாலின் அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை வார்டு வார்டாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சை முறைகள் குறித்தும் மருந்துகள் தாராளமாக கிடைக்கிறதா என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
உடல்நலன் தேற ஆறுதல்
பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் ஆகியோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் பந்தர் கார்டன் பகுதிக்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நலன் விசாரித்த ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து அகரம் சோலையராஜா தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழம் அளித்தும் ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறு குழந்தைகள் விரைவில் உடல்நலன் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகளையும் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார்.
400 பேர் உயிரிழப்பு என தகவல்
தமிழகத்தில் டெங்கு நோய் பாதிப்பு குறித்து பொய்யான தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வருவதாக ஸ்டாலின் இந்த ஆய்விற்குப் பின்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார். தமிழகத்தில் டெங்குவிற்கு நாள் ஒன்றிற்கு 10 பேர் உயிரிழப்பதாகவும், இதுவரை 400 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.