காவிரி: சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்தல் #dmk
காவிரி நதிநீர் பிரச்சனைக்காக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை: காவிரி நீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; காவிரி பிரச்சனைக் குறித்து விவாதிக்க தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.க. தலைவர் வீரமணி, காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை காங். தலைவர் கே.ஆர். ராமசாமி, தமாகா தலைவர் வாசன், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாஜக, மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக ஆகியவை ஸ்டாலின் கூட்டிய இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சட்டசபை சிறப்பு கூட்டம்
தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் வறுமையினாலும், கடன் தொல்லைகளாலும் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது. மேலும், ஏறத்தாழ 24 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீர்ப் பஞ்சத்தால் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பிடிவாதமான அணுகுமுறையின் காரணமாக, அரசியல் சட்ட நெருக்கடியையும், மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிப் பொருளாக்கும் கர்நாடக அரசுக்கு அறிவுரை புகட்டி நல்வழிப் படுத்திட வேண்டிய மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக கர்நாடகத்தின் எதிர்மறை நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் பக்கமுள்ள சட்ட நெறிமுறை நியாயத்தை அலட்சியப் படுத்திடும் வகையிலும் நடந்து கொள்வது தமிழக விவசாயிகளுக்குப் பெரும் துரோகம் விளைவிப்பதாக உள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக விவசாயிகளுக்கு உரிய நீதி வழங்கி அவர்களின் துன்பத்தைப் போக்கவும், இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் எந்தவிதக் கருத்து வேறுபாடுமின்றி ஒருங்கிணைந்து ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்தவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் சிறிதும் மதிக்கவில்லை என்பதைக் கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் என்றும் - அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரநிதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து இப்பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் நர்மதா நதிநீர் மேலாண்மை வாரியம், கிருஷ்ணா-கோதாவரி நதிநீர் மேலாண்மை வாரியம் ஆகிய முன்னுதாரணங்களைப் பின்பற்றி, விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு தீர்வு காண வேண்டும் என்றும்
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நிவாரணம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை பொய்த்துப் போய் விட்டது. மேட்டூர் அணையில் தற்போது உள்ள தண்ணீர் அடுத்த பதினெட்டு நாட்களுக்குக் கூடப் போதாத நிலை ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு 2000 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட போதும், அந்த உத்தரவினை கர்நாடக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அப்படியே நிறைவேற்றினாலும் அந்தத் தண்ணீர் சம்பாப் பயிரைக் காப்பாற்ற நிச்சயமாக உதவாது. இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே குறுவை, சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை வழங்காத காரணத்தால், விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களுடைய துன்பங்களை ஓரளவிற்கேனும் குறைத்திடும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசையும், மத்திய அரசையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மத்திய குழுவுக்கு எதிர்ப்பு
காவிரி நீர்ப் பங்கீடு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் காவிரி படுகைப் பகுதிகளில் பார்வையிட்ட நிலையிலும் அந்த குழுவினரின் அறிக்கை தற்போது தமிழகத்தில் நிலவி வரும் உண்மைச் சூழ்நிலையை நடுநிலையோடு வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.