'என்னது... ஸ்டாலின் அம்மா உணவகத்துக்குப் போனாரா?' யார் பார்த்த வேலைப்பா இது!
இன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக ஒரு படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதில் அம்மா உணவகத்தின் வாசலில் நின்றபடி, தட்டில் முக ஸ்டாலின் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
முதலில் இது பார்ப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தாலும், உற்றுப் பார்த்த பிறகுதான் அது ஒட்டுவேலை என்பது புரியும்.
நமக்கு நாமே என்ற தனது புதிய திட்டத்தின் இரண்டாம் கட்டமாக கரூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டுள்ளார் ஸ்டாலின். ஆனால் அவர் நிற்பதாகக் காட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் சென்னை மாநகராட்சி பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் சுற்றுப் பயணத்தின்போது, ஏதோ ஒரு கையேந்தி உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதைத்தான், போட்டோஷாப்பில் அம்மா உணவகமாக மாற்றி யாரோ சமூக வலைத் தளத்தில் பதிந்துள்ளனர்.
இந்த உண்மை புரியாமல், 'ஸ்டாலின் அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறார். பார்த்தீர்களா.. திமுக - அதிமுக என்று மோதிக் கொண்டாலும், அவர்களுக்கு உள்ளுக்குள்ள ஒரு தொடர்பு இருக்கிறது' என்கிற பாணியில் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர் சிலர். சில அரசியல் பிரபலங்களே கூட இதை நம்பிவிட்டதுதான் வேடிக்கை.
அட, அப்படியே ஸ்டாலின் அம்மா உணவகத்தில் சாப்பிடுவது அவ்வளவு பெரிய தப்பா? அது ஒன்றும் அதிமுகவுக்கான உணவகம் இல்லையே.. மக்கள் அனைவருக்கும் பொதுவானதுதானே... ஒரு சட்டமன்ற உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக ஒரு அம்மா உணவகம் இயங்குவதை ஆய்வு செய்யும் அதிகாரம் ஸ்டாலினுக்கு உண்டல்லவா!
நமது பார்வை, எதையும் குதர்க்கமாக நோக்கும் மன ஊனம் மாறாதவரை, நம்ம அரசியலும் மாறப் போவதில்லை!