கருணாநிதிதான் அடுத்த முதல்வர்: யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஸ்டாலின் பேச்சு
சென்னை: 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கருணாநிதி தலைமையில், திமுக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் அறிவித்து, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன் அறிவிப்பு இன்றி அளவுக்கு அதிகமான நீரை செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிட்டதுதான் சென்னை சந்தித்த வெள்ள பிரச்சினைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள திமுக, இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என கருணாநிதி தலைமையில், கவர்னர் ரோசய்யாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
இருப்பினும், இதுவரை நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. எனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரே கருணாநிதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர்.
கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன், ஜெ.அன்பழகன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணி மற்றும் பல மாவட்ட கழக செயலாளர்கள் வந்திருந்தனர்.

அசம்பாவிதங்கள்
ஜெயலலிதா ஆட்சியில் இதற்கு முன்பு நடைபெற்ற அசம்பாவிதங்களை ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார். மகாமகம், சுனாமி, மவுலிவாக்கம் உள்ளிட்ட பல அசம்பாவிதங்கள் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றதாக ஸ்டாலின் பட்டியலிட்டார்.

அதிகாலை பணி
கருணாநிதி முதல்வராக இருந்தபோது எத்தனையோ முறை மழை பெய்தது. அப்போது கருணாநிதி அதை எப்படி சமாளித்தார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று கூறிய ஸ்டாலின், புழல் ஏரி உடைபடும் நிலைக்கு வந்தபோது, முதல்வராக இருந்தபோதும், அதிகாலை 4.30 மணிக்கு கருணாநிதி புழல் ஏரி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினார்.

பதில் சொல்ல வேண்டும்
2016ல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும்போது, இதற்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டிவரும் இவ்வாறு ஸ்டாலின் பேசினார். இப்போது சென்னை பாதிக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதாதான் முழு காரணம். அமைச்சரவை என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு. பிறர் மீது பழிபோட்டு ஜெயலலிதா தப்பிக்க முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கருணாநிதி ஆட்சி
இதன்பிறகு கூறியதுதான் ஹைலைட். "இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் ஜெயலலிதாவுக்கு வரும். 2016ல் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமையும்போது, இதற்கெல்லாம் ஜெயலலிதா பதில் சொல்லியாக வேண்டிவரும்" என உரையை முடித்தார் ஸ்டாலின். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கர ஓசை அடங்க சில விநாடிகள் பிடித்தது.

நமக்கு நாமே
நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் தன்னை முதல்வர் வேட்பாளராக மக்கள் மன்றத்தில் நிறுத்துவதற்கு முயலுவதாக விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், ஸ்டாலின் வரும் தேர்தலில் கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி என கூறி, இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொண்டர்கள் குழப்பம் தீர்ந்தது
ஏற்கனவே ஸ்டாலின் கருணாநிதிதான் முதல்வர் என கூறிவந்தாலும், திரளான திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் இன்று பேசிய பேச்சும், கருணாநிதியின் செயல்பாட்டு திறமை குறித்து அவர் கூறிய கருத்துக்களும், திமுக தொண்டர்களுக்கு இருந்த ஐயத்தை நீக்கியுள்ளது. திமுக தொண்டர்கள் பலரும் இக்கருத்தை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications