மேலேயும் கீழேயும் பார்த்துப் பார்த்து கும்பிட்டு குட்டிச்சுவராக்கிட்டீங்களே.. ஸ்டாலின் 'வேதனை'!
மதுரை: வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்து மேலும் கீழும் கும்பிட்டு தமிழ்க் கலாச்சாரத்தை குட்டிச் சுவராக்கி விட்டார்கள் அதிமுகவினர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளர் ரத்தினவேலுவை ஆதரித்துப் பிரசாரம் செய்து பேசியபோது இப்படிக் கூறினார் ஸ்டாலின்.
பிரசாரத்தின்போது ஸ்டாலின் பேசியதிலிருந்து..
உண்மையோடும், உணர்வோடும்
உங்களை உணர்வோடும், உண்மையோடும் சந்திக்க நாடி வந்துள்ளேன். தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க வருபவன் நான் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை சந்தித்து வருபவர்கள் நாங்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரசாரம் செய்கிறார். மக்களைப் பார்ப்பதற்கு அவருக்கு அவர் அஞ்சுகிறார்.
யானை கூட மோதுதுப்பா...
உங்களைப் பார்க்க அவருக்கு விருப்பமில்லை. ஆனால் காட்டில் உள்ள யானையைப் பார்க்க முதுமலைக்குச் செல்கிறார். அங்கு குட்டி யானை கூட அவர் மீது மோதுகிறது. 5 அறிவு படைத்த ஜீவனே அவரிடம் மோதும் போது 6 அறிவு படைத்த நாம் இந்த தேர்தலில் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும்.
இணைத்ததே நாங்கள்தான்
திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஹார்விபட்டி ஆகிய பகுதிகளை மதுரை மாநகராட்சியோடு இணைத்தது தி.மு.க. ஆட்சி தான். அப்போது இப்பகுதியில் ரூ.1700 கோடியில் பாதாள சாக்கடை, புதிய சாலைகள் போன்ற திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டன. ரூ.54 கோடியில் அவனியாபுரம் வெள்ளக்கல்லில் குப்பையை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 265 ஏக்கரில் ஐ.டி. பூங்கா, 2 ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன.
அதுக்குள்ள
இப்பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெண்டர் விட்டு பணிகள் தொடங்குவதற்குள் சட்டமன்றத் தேர்தல் வந்து விட்டது. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக்குடி நீர் திட்டம் போன்ற திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
மரத்தை வெட்டிட்டாங்களே
தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை என்றால் தேர்தல் இல்லாத நேரத்தில் எப்படி குடிநீர் பிரச்சினையை முதல்-அமைச்சர் தீர்ப்பார்? ஜெயலலிதாவுக்காக திருச்சியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க அ.தி.மு.க.வினர் மரங்களை வெட்டியுள்ளனர். இதற்காக அபராதம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
மேலேயும் கீழேயும் கும்பிட்டு..
அவர் ஹெலிகாப்டரில் செல்லும் போது அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மேலும், கீழுமாக வானத்தை நோக்கி கும்பிடுகிறார்கள். இவ்வாறு செய்து தமிழ்ப் பண்பாடு, கலாசாரத்தை குட்டிச்சுவராகி விட்டனர்.
ஓவர்.. ஓவர்.. ஓவர்
போலீசார் ஜெயலலிதா கிளம்பி விட்டார் ஓவர், விமான நிலையத்துக்கு புறப்பட்டு விட்டார் ஓவர், ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கிளம்பி விட்டார் ஓவர். இதோ வந்து விட்டார் ஓவர் என்று கூறுகிறார்கள். இந்த தேர்தலில் அவரை ஓவராக்கி விட வேண்டும். அவர் பிரசாரத்தின் போது மக்களைப் பார்த்து செய்வீர்களா, செய்வீர்களா என்று கேட்கிறார். உடனே நீங்கள் சொன்னதை செய்தீர்களா என்று கேட்க வேண்டும். எதை செய்தீர்கள் என்று கேட்க வேண்டும்.
பிரியாணி கொடுத்துக் கூப்பிடவில்லை
இங்கு கூடிய கூட்டம் தானாக கூடிய கூட்டம். அன்பால் கூடிய கூட்டம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடும் கூட்டம் ரூ.500, பிரியாணி கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற, நிலையான அரசு அமைய வேண்டும். கலைஞர் சுட்டிக்காட்டுபவரே பிரதமராக வர வேண்டும். எனவே தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார் அவர்.