தமிழ்நாட்டில் வக்கற்ற, திக்கற்ற நிலையில் ஆட்சி நடைபெறுகிறது - ஸ்டாலின்
தமிழகத்தில் திக்கற்ற, வக்கற்ற ஆட்சி நடைபெறுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசு விழாவிற்கு அழைத்து செல்வது தொடர்கதையாகிறது என்று குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், வக்கற்ற ஆட்சி ஆட்சி நடைபெறுவதாக கூறியுள்ளார்.
கரூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். அதற்காக அவர் அங்கு பயணம் செய்வதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சியில் இருந்து மணப்பாறை, அரவக்குறிச்சி வழியாக கரூருக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. கடந்த சனிக்கிழமை சேலத்தில் நடந்தது போன்று தற்போது கரூர் நகரமே முதல்வரின் வருகையால் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்கள் எடப்பாடி பழனிசாமி விழாவுக்காக அலைக்கழிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் முதல்வர் விழாவுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 100 நாள் ஊதியத்துக்கான தொகை மட்டுமின்றி கூடுதல் பணம் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சிகளை விமர்சனம் செய்யவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது என்றார்.
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசு விழாவிற்கு அழைத்து செல்வது தொடர்கதையாகிறது. பள்ளிகளை கட்டாயப்படுத்தி மூடியது பற்றி தலைமை செயலர் விளக்கம் தரவேண்டும் , அவ்வாறு விளக்கம் அளிக்காவிட்டால் வழக்கு தொடருவேன்.
தமிழ்நாட்டில் எதற்கும் திக்கற்ற, வக்கற்ற ஆட்சியே நடைபெறுகிறது. 100 நாள் வேலைக்கு செல்லும் பொதுமக்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு அழைத்து செல்கின்றனர் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications