திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம் - ஸ்டாலின்
சென்னை: திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம் என அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2ம் கட்ட நேர்காணல் நேற்று நடந்தது. இதில் திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமனு வழங்கியவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.

இதனிடையை செய்தியாளர்களுக்கு ஸ்டாலின்.பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததுபோல் தகவல்கள் வந்துள்ளதே?
பதில்: தகவல் எங்கிருந்து வந்தது என்று தயவு செய்து சொல்லுங்கள், நானும் தெரிந்துகொள்கிறேன்.
கேள்வி: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்: உங்களைப்போல ஊடகங்கள்தான் இதுபோன்று பிரச்சாரம் செய்கின்றன. அது உங்களுடைய விளம்பரத்துக்காகவும், வியாபாரத்திற்காகவும் செய்கிற யுக்தி. அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
கேள்வி: திமுக கூட்டணிஙக்கு தேமுதிக வந்தால் நல்லதா?
பதில்: அதை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.வந்தால் நல்லது. அதைத்தான் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications