மதிப்பெண் குறைந்ததால் போடி அருகே மாணவன் தூக்கிட்டு தற்கொலை
தேனி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதனிடையே தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் எதிர்பார்த்து குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உளவியல் மருத்துவர், சமூக உளவியல் நிபுணர், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் 104 சேவை மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் போடி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அழகுசுந்தரம் (16). இவர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 313 பெற்றும் தனக்கு போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் மனமுடைந்து புதன்கிழமை வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போடி தாலுகா போலீஸார் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..