லுக்கேமியாவால் உயிருக்குப் போராடும் வித்யா... நிச்சயம் ‘உங்களால்’ காப்பாற்ற முடியும்!
சென்னை: லண்டன் மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இளம்பெண்ணான வித்யாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தன் உயிரைக் காப்பாற்றும் வகையில் ஸ்டெம் செல் தரக்கூடிய நபருக்காக காத்துக் கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் வித்யா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் வித்யா (24). கிழக்கு லண்டன், வோல்தம்ஸ்ரோ பகுதியில் வாழ்ந்து வந்த வித்யா, லூக்கேமியா என்னும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ மாணவியான வித்யா, தற்போது லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக வித்யாவுக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால், இதுவரை யாருடைய ஸ்டெம் செல்லும் அவருக்கு பொருந்தவில்லை. இதனால் இரண்டு மாதங்கள் தான் வித்யாவால் இனி உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் கை விரித்து விட்டனர்.
இதனால், தனக்கான உறுப்பு தானம் செய்யும் நல்ல உள்ளம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் வித்யா. இவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோ மற்றும் செய்தி மூலம் வித்யாவிற்கு உதவக் கூடிய நபர் கிடைக்கலாம் என்ற நல்லெண்ணத்தில், இதனை சமூகவலைதளப் பக்கங்களில் மக்கள் பரப்பி வருகின்றனர்.
வித்யாவின் இரத்த மாதிரிக்கு பொருந்தக்கூடிய ஸ்டெம் செல்லைத் தானம் கொடுக்கக்கூடியவர்கள் இங்கிலாந்தில் இருந்து 0303 303 0303 என்ற இலக்கத்திற்கும் வெளி நாட்டவர்கள் 0044 303 303 0303 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், வித்யாவுக்கு தானம் செய்ய விரும்புவோருக்கு, மேற்கு லண்டனில் உள்ள St Anselm's Catholic Church, The Green, Southall, UB2 4BE என்ற முகவரியில் அமைந்துள்ள நிலையத்தில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.












Click it and Unblock the Notifications