நீட் தேர்வு:நிரந்தர விலக்கு கோரி சென்னையில் மாணவர் அமைப்பினர் சட்டசபையை முற்றுகையிட முயற்சி.. கைது!
நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு அளிக்கக்கோரி சென்னையில் மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தினர்.
Recommended Video
சென்னை: நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு அளிக்கக்கோரி சென்னையில் மாணவர் பெருமன்றத்தினர் பேரணி நடத்தினர்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வில் சிபிஎஸ்இ தேர்வு பாடங்களில் இருந்து அதிகளவு கேள்விகள் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு கேள்விக்குறியாகியுள்ளது. நீட் தேர்வில் தோல்வியடைவதால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து சட்டசபையை முற்றுகையிட அவர்கள் பேரணியாக சென்றனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தப்படுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். சட்டசபையை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் சேப்பாக்கத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.