போராட்டத்திற்குப் போன ஆசிரியர்கள் - "லன்ச்"சை முடித்து விட்டு வீடு திரும்பிய மாணவர்கள்!
புதுகை: புதுகை மாவட்டம், கீரமங்கலத்தில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நடைபெற்று வரும் மாநிலம் தழுவிய போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் அங்கு பள்ளி மூடப்பட்டிருந்தது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு திரும்பிச் சென்றனர்.
அரசு நிறைவேற்றாத கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வந்ததால் பள்ளி வழக்கம் போல இயங்கியது.
ஆனால் கீரமங்கலம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்றனர்.
செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே வந்திருந்தார். அதே போல நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் வராததால் பள்ளி திறக்கப்படவில்லை.
அதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலர் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். பல மாணவர்கள் மதியம் வரை பள்ளியில் இருந்து மதிய உணவு சாப்பிட்ட பிறகு வீட்டுக்குச் சென்றனர்.