நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்- ஜனாதிபதிக்கு மாணவர்கள் ரத்தக் கடிதம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மருத்துவ மாணவர்கள் குடியரசுத்தலைவருக்கு ரத்தக் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
சென்னை: நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், ரத்தத்தில் கடிதம் எழுதி அதில் அரசியல் தலைவர்களின் கையெழுத்தை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசு பிறப்பித்த ஆணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு கேள்விக்குறியாகி விட்டது என்பது அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டாகும்.
Recommended Video
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் ரத்தக் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் பொது தேர்வு என்பது மாணவர்களுக்கு அளிக்கும் அநீதி என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து ரத்தக் கடிதத்தில் அரசியல் தலைவர்களின் கையெழுத்தை பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
எம்எல்ஏக்கள் தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் ஆகியோரைச் சந்தித்தும் தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சந்தித்தனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்குமாறு மருத்துவ மாணவர்கள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தங்களது ரத்தகடிதத்தில் ஸ்டாலினிடம் கையெழுத்து பெற்றனர். இந்த கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.