மெரினாவில் மின்சாரம் துண்டிப்பு.. மொபைலில் டார்ச் லைட் அடித்து போராட்டத்தை தொடர்ந்த இளைஞர்கள்!
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் சென்னையில் நடத்தி வரும் போராட்டம் விடிய விடிய தொடர்ந்து வருகிறது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இளைஞர்கள், மாணவர்கள் தங்களது மொபைல் மூலம் டார்ச் லைட் அடித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை முதலே அலங்காநல்லூரில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாடுபிடி வீரர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனிடையே இன்று காலை, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏராளமான இளைஞர்கள், பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோரை கிராமத்தில் இருந்து வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் சேலம், கோவை, விருதுநகர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டோரை விடுவிக்ககோரி மாணவர்கள், இளைஞர்கள் காலை முதலே போராடி வருகின்றனர். சமூக வலைதளங்களின் மூலம் ஒருங்கிணைந்த இவர்களின் போராட்டம் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய தொடர்ந்து வருகிறது.
போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் பல முறை பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இதனிடையே மெரீனா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதையுடம் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் தங்களது மொபைலில் டார்ச் லைட்டை அடித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications